10-வது உலகத் தமிழ் மாநாடு


10-வது உலகத் தமிழ் மாநாடு
x

பத்தாவது உலகத் தமிழ் மாநாடு அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் ஜூலை 4-ந்தேதி(இன்று) தொடங்கி 7-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

மாநாட்டில் கலந்துகொள்வதற்கு இந்திய ஜனாதிபதிக்கும், தமிழக முதல்-அமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் இருவரும் கலந்து கொள்ள முடியாத நிலையில், தமிழக அமைச்சர் மாபா பாண்டியராஜன் கலந்துகொள்கிறார். தமிழக அரசின் சார்பில் 20 தமிழறிஞர்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள். இந்த மாநாடு சிறப்பாக நடக்க தமிழக அரசு வேண்டிய உதவிகளை செய்யும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டை உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், வட அமெரிக்கத் தமிழ்சங்க பேரவை மற்றும் சிகாகோ தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

உலகம் முழுமையிலும் இருந்து சுமார் 6,000 பேர் கலந்துகொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து, ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இலங்கை, இங்கிலாந்து, மொரிசியஸ், சிங்கப்பூர், மலேசியா... போன்ற பல நாடுகளிலும் இருந்து ஏராளமான தமிழ் அறிஞர்கள் இம் மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு இதுவரை 2000 ஆய்வு கட்டுரைகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், இதிலிருந்து 80 கட்டுரைகளே தேர்வாகியுள்ளன. இவை இம்மாநாட்டில் வாசிக்கப்படுவதோடு, புத்தகமாகவும் உருவாகும்!

உலகத் தமிழ் மாநாட்டின் நோக்கங்கள்

உலகத்திலுள்ள 6,000 மொழிகளில் ஆறு மொழிகளே செம்மொழி எனும் தகுதி பெற்றவை. அவை, கிரேக்கம், லத்தீன், எபிரேபியம், சீனம், சமஸ்கிருதம், தமிழ் ஆகியவையே! ஆயினும், பாலி, அரபி, பாரசீகம் ஆகியவையும் கூட செம்மொழி என்பாரும் உண்டு! மேமொழி என்றால், அந்த மொழி குறைந்தபட்சம் 2000 ஆண்டு கால பாரம்பரியம் கொண்டிருக்க வேண்டும். அதில் இலக்கணம், இலக்கியம், கலை சொல்லும் நுட்பங்கள் ஆகியவை ஆதி காலம் முதலாக இருக்க வேண்டும். இந்த தகுதிகளோடு தற்போதும் கூட அழிந்து போகாமல் புழக்கத்தில் இருக்கும் தகுதி கொண்டதாக தமிழ் விளங்குகிறது. ஒரு மொழி எவ்வளவு பழமையாக இருந்தாலும், அது காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டே வந்தால் மட்டுமே நிலைபெறும். அந்த வகையில், நவீன மொழி ஆய்வுகள், தொல்லியல் ஆய்வுகள், சிற்பம், கட்டிடக் கலை, அறிவியல் சார்ந்த ஒப்பீடுகள் ஆகியவை இம் மாநாடுகளில் விவாதிக்கப்படும். அதுவும் சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகள், அதில் கிடைத்த 13,638 பழம் பொருட்கள், குறிப்பாக இவை, தமிழ் தொன்மை மீது பாய்ச்சியுள்ள வெளிச்சம் மிக முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. முக்கியமாக தொன்மை தமிழுக்கும், தமிழ் கலாசாரத்திற்கும் நவீன தமிழ் மற்றும் தமிழ் கலாசாரத்திற்குமான இணைப்பு பாலமாக உலகத் தமிழ் மாநாடுகள் திகழ்கின்றன.

அமெரிக்காவில் தமிழ் மாநாடா?

அமெரிக்காவில் தற்போது 2 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர். அதன் பல மாகாணங்களில் பல தமிழர்கள் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர். இவை தவிர உலக அளவில் அறியப்பட்ட, கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை, பெப்சி நிறுவனத்தின் சி.இ.ஒ. இந்திரா நூயி, நோபல் பரிசு வென்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், பிரபல அறிவியல் மேதை ஸ்ரீநிவாச வரதன்... உள்ளிட்ட பல தமிழர்கள் அமெரிக்காவில் புகழ் கொடி நாட்டியுள்ளார்கள். அமெரிக்காவில் நடக்கவிருக்கும் உலகத் தமிழ் மாநாடு குறித்து அதன் செய்தி தொடர்பாளரும், வாஷிங்டன் தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவருமான பார்த்தசாரதியிடம் பேசிய போது, “அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் தங்களின் அடுத்தடுத்த தலைமுறைகளும் தமிழையும், தமிழ் கலாசாரத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். 



இங்கே உள்ள 50 மாவட்டங்களில் 240 தமிழ் பள்ளிக்கூடங்களை நாங்கள் நடத்துகிறோம். அரசாங்கமே சுமார் எட்டு மாவட்டங்களில் தமிழ் மொழி ஆசிரியர்களை நியமித்து தமிழ் கற்பிக்க உதவுகிறது. நாங்கள் ஒவ்வொருவரும் சாப்ட்வேர், மருத்துவம், பொறியியல், வியாபாரம் என பல துறைகளில் உள்ளோம். ஒவ்வொரு மாகாணத்திலும் தமிழ் சங்கங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. இவை அனைத்தும் இணைந்து தான் இந்த தமிழ் மாநாட்டை நடத்துகின்றன. நாங்கள் 500 பேர் சுமார் ஆறு மாதங்களாக இந்த உலகத் தமிழ் மாநாட்டை சிறப்பாக நடத்த திட்டமிட்டு கடுமையாக பாடுபட்டு வருகிறோம். இதன் மூலம் தமிழ் வளர்ச்சி ஒரு புறம் அத்துடன் தாயகத் தமிழர்களுடனான எங்கள் நெருக்கம் மறுபுறமுமாக வளர்த்தெடுக்க விரும்புகிறோம்” என்றார்.

சுமார் 250 தமிழ் ஆளுமைகள் பங்கேற்கிறார்கள்

தமிழகத்தில் இருந்து சாலமன் பாப்பையா, சாகித்ய அகாடமி பரிசு பெற்றவரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன், சீர்காழி சிவசிதம்பரம், ஓவியர் மணியம் செல்வன், எழுத்தாளர்கள் ஸ்டாலின் குணசேகரன், கம்யூனிஸ்டு தலைவரும் எழுத்தாளருமான சி.மகேந்திரன், பட்டிமன்ற பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர், ராஜா, இசை அமைப்பாளர்கள் யுவன்சங்கர் ராஜா, ஜேம்ஸ் வசந்தன், ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர் சீனிவாசன், நாட்டுப்புற கலைஞர்கள் ராஜலட்சுமி, கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன், விடியன் நாதஸ்வரம், கவிஞர் சல்மா, கல்வியாளர் பொன்னவைக்கோ, இயக்குனர் கரு.பழனியப்பன், மணி அருணாச்சலம், பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். உள்பட சுமார் 250 பேர் செல்கிறார்கள்!



நிதிக்கு மறுப்பா? சர்ச்சைகள்..!

உலக தமிழ் மாநாட்டிற்கு தமிழக அரசு சார்பில் ஐந்து கோடி தருவதாக முதல்-அமைச்சர் அறிவித்தார், ஆனால், அதை தருவதற்கு மத்திய அரசு அனுமதிக்கவில்லை. மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வறிக்கை வாசிக்க ஏழு தமிழ் அறிஞர்கள் செல்வதற்கு அவர்களது பொருளாதார நிலைமையை காரணம் காட்டி அமெரிக்க அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். ஆனால், அவர்கள் கலந்துகொள்வதற்கு விழா ஏற்பாட்டாளர்களே முழு செலவையும் ஏற்கும் நிலையில் அனுமதி மறுப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக எம்.பி.க்களான சு.வெங்கடேசன், செல்லக்குமார், நவாஸ்கனி, செந்தில்குமார், மாணிக்தாகூர் ஆகியோர் வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருக்கு வேண்டுகோள் விடுத்தனர். வெங்கடேசன் நேரிலேயே வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து வலியுறுத்தினார்.

சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு: இந்த விஷயத்தில் தமிழக அரசு தீவிர முயற்சி எடுக்கவில்லை. அ.தி.மு.க. எம்.பி.க்கள் அழுத்தம் தரவில்லை. இந்த தமிழ் மாநாடு தொடர்பாக மத்திய அரசுக்கு விருப்பம் இல்லாத நிலை தெரிகிறது. கீழடி தொல்லியல் ஆய்வுகள் நடந்த போதும் மத்திய அரசு அதில் அக்கறை காட்டாத போக்கை பார்க்க முடிந்தது. தமிழக அரசு இதற்கு தீவிரம் காட்டாததற்கு மத்திய அரசின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டாம் என்பது கூட காரணமாக இருக்கலாம். பொதுவாக வெளிநாடுகளில் நடக்கும் மொழி மாநாடுகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் நிதி உதவி செய்வது என்பது இயல்பாக நடப்பது தான். ஆந்திர அரசு தெலுங்கு மாநாடு அமெரிக்காவில் நடக்கும் போது ஏராளமாக நிதி உதவி செய்து வருகிறது. அதே போல கேரளா அரசும் நிதி உதவி செய்கிறது. கடந்த காலங்களில் கருணாநிதி, ஜெயலலிதா அரசுகள் இவ்வாறு வெளிநாடுகளில் நடக்கும் உலகத் தமிழ் மாநாடுகளுக்கு நிதி உதவி செய்துள்ளன. ஆனால் இதை தடுப்பதையோ, அல்லது இவ்வளவு தான் தர வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதையோ ஏற்கமுடியாது. என்றாலும் இந்த மாநாட்டுக்காக தமிழக அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஆரம்பத்தில் இருந்தே தீவிரம் காட்டி வருவதை யாரும் மறுக்க முடியாது.

தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன்: இந்த மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து சுமார் 250 பேர் செல்கிறார்கள். என்னு டன் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, வைகை செல்வன் ஆகியோர் வருவதாக இருக்கிறது. தமிழக அரசு சார்பில் 20 பேரை அழைத்து செல்வதாக ஏற்பாடு. இதில் இன்னும் சிலருக்கு விசா கிடைக்கவில்லை. கடைசி நேரத்தில் கிடைக்கலாம். மத்திய அரசு நிதி தருவதை தடுக்கவில்லை. ஆனால், ‘எவ்வளவு தருவதற்கு அனுமதி’ என்பதில் தான் சிக்கல்.

மாநாட்டின் சிறப்பு: சிகாகோவின் சாம்பர்க் கன்வர்ஷன் மையத்தில் ஜூலை 4-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை நடக்கிறது. இதில் மொரிஷியஸ் செயல் குடியரசுத் தலைவர் பரமசிவம் வையாபுரிபிள்ளை, ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். ‘கீழடி நம் தாய்மடி’ என்ற தலைப்பில் சிறப்பு ஆய்வரங்கம் நடக்கிறது. குறள்தேனீ, தமிழ்தேனீ, சங்கங்களின் சங்கமம், குறும்படப் போட்டி, கங்கை கொண்ட சோழன் நாட்டிய நாடகம், இலக்கிய வினாடி வினா, கவியரங்கம், யுவன்சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி ஆகியவை இடம் பெறுகின்றன. சொற்குவை என்ற பெயரில் தமிழ் சொற்கள் அனைத்தையும் தொகுத்து, வரிசைபடுத்தி இலக்கண வகைகளை பதிவு செய்து இணைய பயன்பாட்டுக்கு தர உள்ளனர்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆய்வாளர்கள், மாணவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், தொழிலதிபர்கள் கலந்துகொள்கிறார்கள். 32-க்கும் மேற்பட்ட இணையமர்வுகள், 160 மணி நேரத்திற்கும் மேற்பட்ட கலை, இலக்கிய நிகழ்வுகள் இம் மாநாட்டில் நடக்கவுள்ளன. ஈழத் தமிழ் நாட்டியமும் மரபுகளும், தமிழ் இசை சிம்பனி, இயற்கையில் பிறந்த தமிழ் இசை பெரும் நாட்டிய நாடகம், நாட்டுப்புற இசை, தமிழ் பாரம்பரிய பெருவிருந்து ஆகியவை மாநாட்டின் சிறப்பு அம்சங்களாகும்!

சிகாகோ நகரில் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்கான செலவுகள் அனைத்தையும் தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் ஏற்றுள்ளார். ஜூலை 6 மற்றும் 7-ந்தேதிகளில் தமிழர்களின் வணிக பொருளாதாரம் தொடர்பான மாநாடும் நடக்கவுள்ளது. மொத்தத்தில் இந்த மாநாட்டிற்கான செலவு சுமார் ரூ.20 கோடியிலிருந்து ரூ.25 கோடி வரை ஆகலாம் என சொல்லப்படுகிறது

Next Story