சுப்ரீம் கோர்ட்டின் முக்கிய தீர்ப்புகளை தமிழில் வெளியிட நடவடிக்கை - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


சுப்ரீம் கோர்ட்டின் முக்கிய தீர்ப்புகளை தமிழில் வெளியிட நடவடிக்கை - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Sep 2019 10:00 PM GMT (Updated: 2 Sep 2019 9:40 PM GMT)

மாநில அரசுகளிடம் இருந்து மொழி பெயர்ப்பு வல்லுனர்களை பெற்று சுப்ரீம் கோர்ட்டின் முக்கிய தீர்ப்புகளை தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டில் வழங்கப்படும் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளின் விவரங்களை ஆங்கிலம் தெரியாத வழக்குதாரர்களும் அறிந்து கொள்ளும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் முயற்சியால் தொடங்கப்பட்ட உன்னதமான திட்டம் தொடக்கத்திலேயே நிறுத்தப்படுவது வருத்தமளிக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடுவதற்கு தனித்துவமான மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதில் ஏற்பட்ட சில நடைமுறை சிக்கல்களின் காரணமாகத்தான் மொழி பெயர்ப்பு செய்யப்படவில்லை என்றும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

தீர்ப்புகளை சட்டம் தெரிந்த மொழிபெயர்ப்பு வல்லுனர்களின் மூலம் மொழி மாற்றம் செய்வது தான் மிகவும் சரியானதாக இருக்கும். இதற்காக சம்பந்தப்பட்ட மொழி பேசும் மாநிலங்களின் உதவியைக்கூட சுப்ரீம் கோர்ட்டு கேட்டுப்பெறலாம்.

எனவே, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை மொழிபெயர்ப்பதற்கான வல்லுனர்களை சம்பந்தப்பட்ட மொழி பேசப்படும் மாநில அரசிடம் இருந்து, அங்குள்ள ஐகோர்ட்டு மூலமாக சுப்ரீம் கோர்ட்டு கேட்டுப்பெற வேண்டும். அவர்களின் உதவியுடன் முக்கியத் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிட சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடும் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு கைவிட்டு விடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story