உள்ளாட்சி தேர்தலில் மகன், மகள் தோல்வி அடைந்தது ஏன்? அன்வர் ராஜா விளக்கம்

உள்ளாட்சி தேர்தலில் மகன், மகள் தோல்வி அடைந்தது ஏன்? என அன்வர் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
உள்ளாட்சி தேர்தலில், அதிமுக முன்னாள் எம்.பி., அன்வர் ராஜாவின் மகன் மற்றும் மகள் தோல்வியடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்தில் 2-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல் அதவியா போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து மண்டபம் ஒன்றிய (மேற்கு) தி.மு.க.பொறுப்பாளர் ஜீவானந்தம் மனைவி சுப்புலட்சுமி போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் சுப்புலட்சுமி 2310 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ராவியத்துல் அதவியா 1062 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அன்வர்ராஜாவின் மகனும் தோல்வியடைந்தார்.
இது தொடர்பாக அன்வர் ராஜா தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில்,
அதிமுக அரசுக்கு எதிராக சிறுபான்மையினர் ஓட்டளித்துள்ளனர். குடியுரிமை சட்டத்தை ஆதரித்ததால், உள்ளாட்சி தேர்தலில் தோல்வி ஏற்பட்டுள்ளது. தேசிய குடியுரிமை பதிவேடு நாடு முழுவதும் அமலாகும் என்ற அச்சம் சிறுபான்மையினர் மத்தியில் நிலவுகிறது. சிறுபான்மையினர் அச்சப்படுவதால், அதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் என நம்புகிறேன்.
தேசிய குடியுரிமை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் என அரசு சொல்லும் என விரும்புகிறேன். அசாமில் மட்டுமே அமல் என பாஜக கூறியதால், பாராளுமன்றத்தில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு அளித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story