வடமாநிலத்தவர்களின் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்

வடமாநிலத்தவர்களின் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தை தமிழ் தேசிய கட்சியினர் நடத்தினர்.
தஞ்சாவூர்,
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஆர்.ஆர்.நகர், பழைய பஸ் நிலையம் பகுதிகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் கடைகள் உள்ளன. கிரானைட்ஸ் மற்றும் இனிப்பகம், பிளாஸ்டிக் பொருட்கள், எலக்ட்ரிக்கல் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன.
வடமாநிலத்தவர்களால் தமிழர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. எனவே அவர்கள் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக்கூறி தமிழ் தேசிய கட்சியினர், கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
கடைகளுக்கு பூட்டு போட்டனர்
அதன்படி நேற்று ஆர்.ஆர்.நகரில் உள்ள வடமாநிலத்தை சேர்ந்த 4 கடைகளுக்கு தமிழ் தேசிய கட்சியினர் பூட்டு போட்டனர். மேலும் அதன் அருகே துண்டு பிரசுரங்களையும் வைத்திருந்தனர்.
அதில், தமிழர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வடமாநிலத்தவர்கள் உடனே வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் வெளியேற்றுவோம். இங்கு கடைகளை திறக்கக்கூடாது போன்ற வாசகங்கள் இருந்தன.
போலீஸ் நிலையம் முற்றுகை
இந்த நிலையில் நேற்று கடையை திறக்க வந்த கடைக்காரர்கள் கடையில் வேறு பூட்டு போட்டு பூட்டப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் தஞ்சை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக வணிகர்கள் சங்க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த வணிகர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், கடைகளுக்கு பூட்டு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுக்களையும் அளித்தனர்.
திருச்சி
திருச்சியில் வட மாநிலத்தவர்களின் கடைகளுக்கு பூட்டு போராட்டம் நடத்துவதற்காக தமிழ் தேசிய கட்சியினர் நேற்று காலை மத்திய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு ஓட்டல் முன்பு திரண்டனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கடைகளுக்கு பூட்டு போட முயன்ற 70 பேரை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை வேனில் ஏற்றி கருமண்டம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் இரவோடு இரவாக தமிழ் தேசிய கட்சியினர், வட மாநிலத்தவர்கள் நடத்தும் கடைகளுக்கு பூட்டு போட்டு, துண்டு பிரசுரங்களை ஒட்டிவைத்து சென்றுவிட்டனர். நேற்று காலை இதுகுறித்து தெரியவந்ததும் கடையின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story