திமுக கவுன்சிலரை அழைத்துச் சென்ற அதிமுக -மண்ணை வாரித் தூற்றிய திமுகவினர்


திமுக கவுன்சிலரை அழைத்துச் சென்ற அதிமுக -மண்ணை வாரித் தூற்றிய திமுகவினர்
x
தினத்தந்தி 6 Jan 2020 9:49 AM GMT (Updated: 6 Jan 2020 10:51 AM GMT)

திமுக கவுன்சிலரை அழைத்துச் சென்ற அதிமுகவினரின் வாகனம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாகனம் மீது திமுகவினர் மண்ணை வாரி தூற்றி கோஷங்கள் எழுப்பினர்.

கரூர்

கரூர் மாவட்டத்தில் கரூர், க.பரமத்தி, அரவக்குறிச்சி, தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், குளித்தலை, தோகைமலை ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் அதிமுக வேட்பாளர்களே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

இதனால், இந்த எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு அதிமுகவை சேர்ந்தவர்களையே தேர்ந்தெடுக்க முடியும்.

ஆனால், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அந்த நிலை இல்லை. காரணம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு பட்டியல் பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவரே ஒன்றியக்குழு தலைவர் ஆக முடியும்.

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஒன்றிய வார்டுகள் உள்ளன. இதில் 10 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மூன்று இடங்கள் பட்டியல் பிரிவு பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று இடங்களிலும் திமுகவினரே வெற்றி பெற்றுள்ளனர்.

அதாவது 2, 7 மற்றும் 11 ஆகிய மூன்று வார்டுகள் பட்டியல் பிரிவு பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த மூன்று ஒன்றிய வார்டுகளிலும் திமுக பெண் வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். இது தவிர 1- வது வார்டு மற்றும் மூன்றாவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் பட்டியல் பிரிவைச் சேர்ந்த பெண் வேட்பாளர்களும் திமுக, காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இதனால், அதிமுக கூட்டணியில் 10 இடங்களில் வெற்றி பெற்று ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு போட்டியிட பட்டியல் பிரிவு பெண் வேட்பாளர் யாரும் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், இன்று பதவியேற்பு நிகழ்வு முடிந்ததும் ஏழாவது வார்டு திமுக கவுன்சிலர் சந்திரமதியை போலீஸ் பாதுகாப்புடன் அதிமுகவினர் காரில் அழைத்துச் சென்றனர்.

அவரை அழைத்துச் சென்ற அதிமுகவினரின் வாகனம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாகனம் மீது திமுகவினர் மண்ணை வாரித் தூற்றி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story