சிறந்த சிந்தனைகளை தாய்மொழியில்தான் பெறமுடியும் ; வெங்கையா நாயுடு பேச்சு


சிறந்த சிந்தனைகளை தாய்மொழியில்தான் பெறமுடியும்  ; வெங்கையா நாயுடு பேச்சு
x
தினத்தந்தி 11 Jan 2020 9:57 PM GMT (Updated: 11 Jan 2020 9:57 PM GMT)

சிறந்த சிந்தனைகளை தாய்மொழியில்தான் பெறமுடியும் என்று தியாகராஜர் ஆராதனை தொடக்க விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

திருவையாறு, 

தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜரின் 173-வது ஆராதனை விழா நேற்று தொடங்கியது. விழாவிற்கு தியாக பிரம்ம மகோத்சவ சபை தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.

விழாவை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ரோமாபுரி, பாபிலோனியா, கிரேக்கம், எகிப்து போன்ற நாகரிகங்களைப்போல இந்திய நாகரிகம் மிகவும் பழமை வாய்ந்தது. இவற்றில் இந்திய நாகரிகம் மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகமே நம் குடும்பம் என்பதையே நம் பண்பாடு குறிப்பிடுகிறது. இந்த கலாசாரம் நமது முன்னோர்களிடம் இருந்து வந்தது.

மற்ற நாடுகளில் கடவுள் ஒருவரே என்கின்றனர். நம் பண்பாட்டில் எவ்வளவோ கடவுள்கள் இருக்கலாம். கோடிக்கணக்கில் கடவுள்கள் இருக்கும் நிலையில் அடுத்து ஒரு கடவுள் வரலாம். அது தவறு ஒன்றும் இல்லை. இதுதான் நமது பண்பாட்டின் சிறப்பு. நமது நாடு உயரிய கலாசாரத்தை கொண்டது. இதுவே நமது நாடு உலக அளவில் புகழ்பெற்று இருப்பதற்கு காரணம்.

நமது நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருக்கலாம். நாம் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், நாட்டின் வளர்ச்சி என்று வரும்போது அனைவரும் ஒரே கட்சியில் நிற்க வேண்டும். நாம் எந்த கட்சியில் இருந்தாலும் அனைவரும் இந்தியர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

தாய்மொழியிலேயே கல்வி கற்க வேண்டும். குறிப்பாக பள்ளிக்கல்வியை ஆங்கில மொழியில் கற்பதை விட தாய்மொழியில் கற்பது அவசியம். சிறந்த சிந்தனைகளை தாய்மொழியில்தான் பெறமுடியும். எனவே தாய்மொழியை கைவிடக்கூடாது.

இசை மக்களை ஒருங்கிணைக்கிறது. நம்முடைய இசை உலகப் புகழ்பெற்றது. இசையில் நாம் கவனம் செலுத்தினால் நம் மனதும் மேம்படும்.

குழந்தைக்கு தாய் பாடும் தாலாட்டில் தொடங்கி வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் இசை ஊடுருவி நிற்கிறது. தூய்மையான இசை என்பது நமது ஆன்மாக்களை செம்மைப்படுத்தக்கூடியது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் நன்றி கூறினார்.

Next Story