வியாபாரியால் பலாத்காரம் செய்யப்பட்ட காதலியை கரம்பிடித்த மகன்

வேதாரண்யம் அருகே வியாபாரியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட காதலியை வாலிபர் கரம்பிடித்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
நாகை,
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு நித்யானந்தம். இவர் காய்கறி வியாபாரி. இவருடைய மகன் முகேஷ்கண்ணன்(வயது 20). இவர் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர்.
அந்த பெண்ணும், முகேஷ்கண்ணனும் தொழிற்பயிற்சி நிலையத்தில்(ஐ.டி.ஐ.) ஒன்றாக படித்தபோது காதல் மலர்ந்தது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் ஊருக்கு வந்திருந்தார். முகேஷ்கண்ணனும் ஊருக்கு வந்திருந்தார். மகனின் காதல் கருப்பு நித்யானந்தத்துக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. அவர், தனது மகனுக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு இருந்தார்.
பலாத்காரம்
இந்த நிலையில் சம்பவத்தன்று தனது மகனின் காதலியை ரகசியமாக சந்தித்து பேசிய கருப்பு நித்யானந்தம், ‘முகேஷ்கண்ணனுக்கும், உனக்கும் திருமணம் செய்து வைக்கிறேன்’ என ஆசை வார்த்தை கூறி உள்ளார். அவருடைய ஆசை வார்த்தையால் கவரப்பட்ட அந்த பெண், கருப்பு நித்யானந்தத்தை நம்பி உடன் சென்றார்.
ஆனால் கருப்பு முருகானந்தம் அந்த பெண்ணை காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் அந்த பெண்ணை ஒரு வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
3 பேர் கைது
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி வெர்ஜினியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கருப்பு நித்யானந்தம், தனது மகனின் காதலியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பு நித்யானந்தம் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரிக்காடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல், அவரது மனைவி பவுன்ராஜவள்ளி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
கரம்பிடித்த காதலன்
அந்த பெண்ணை முகேஷ் கண்ணன் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், தந்தையால் அந்த பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அவரை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது. ஆனாலும் அவர், தனது காதலியை கைவிடவில்லை. அவரையே திருமணம் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு அந்த பெண்ணை முகேஷ்கண்ணன் கரம்பிடித்தார். இவர்களுடைய திருமணம் பெண்ணின் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் ஊர்மக்கள் முன்னிலையில் நடந்தது. புதுமண தம்பதிக்கு ஊர் மக்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த திருமணம் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story