குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கருத்து: பா.ஜ.க.வின் ஊதுகுழலாக ரஜினிகாந்த் திகழ்கிறார் - கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கருத்து: பா.ஜ.க.வின் ஊதுகுழலாக ரஜினிகாந்த் திகழ்கிறார் - கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு
x
தினத்தந்தி 6 Feb 2020 2:33 AM GMT (Updated: 6 Feb 2020 2:33 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து பா.ஜ.க.வின் ஊதுகுழலாக ரஜினிகாந்த் திகழ்கிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் உள்ள மக்களை மத ரீதியாக பிளவுபடுத்துகிற நோக்கத்தில் மத்திய பா.ஜ.க. அரசு இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இதை எதிர்த்து நாட்டு மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு தங்களது எதிர்ப்புகளை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். குடியுரிமை சட்ட திருத்தம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எதிரானது என்ற உணர்வு இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

அதற்கு காரணம் மத்திய பா.ஜ.க. அரசின் மதவெறி அரசியல் தான். குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், ‘குடியுரிமை திருத்த சட்டத்தால் நாட்டு மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அரசியல் கட்சிகள் மக்களிடையே தவறான பிரசாரத்தின் மூலம் பீதியை கிளப்பி வருகிறார்கள்’ என்று கருத்து கூறியிருக்கிறார். எப்படியோ பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ரஜினிகாந்த் யார் என்பதை அடையாளம் காட்டுவதற்கு இந்த கருத்து ஒன்றே போதும். தமிழக அரசியலில் வகுப்புவாத பா.ஜ.க.வுக்கு பல்லக்கு தூக்குவதற்கு ரஜினிகாந்த் தயாராகிவிட்டார்.

ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் முகமூடி இன்றைக்கு அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் எந்த பாதையில் அவரை அழைத்துச்செல்ல வேண்டும் என்று அவரை இயக்குபவர்கள் முடிவு செய்திருக்கிறார்களோ, அந்த பாதையில் பயணிக்க ரஜினிகாந்த் தயாராகி விட்டார். இதன் மூலம் தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளவேண்டிய நிலை ரஜினிகாந்துக்கு ஏற்படப்போகிறது. இதுவரை ரஜினிகாந்தை ஒரு நடிகராக பார்த்த தமிழக மக்கள் இனி, பா.ஜ.க. வின் ஊதுகுழலாக பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story