முகநூலில் கி.வீரமணி பெயரில் ஆபாச படங்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு


முகநூலில் கி.வீரமணி பெயரில் ஆபாச படங்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 10 Feb 2020 10:15 PM GMT (Updated: 10 Feb 2020 9:45 PM GMT)

திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி பெயரில் முகநூலில் ஆபாச படங்களை பதிவு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கிற்கு பதில் அளிக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

திராவிடர் கழகத்தின் வடசென்னை மாவட்ட இளைஞர் அணி தலைவர் பி.தளபதி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தந்தை பெரியார் கொள்கையை தன்னுடைய 10 வயதில் ஏற்றுக்கொண்டு சமுதாயப் பணிகளை செய்து வருபவர் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி. இவர், முகநூலில் ‘ஆசிரியர் கே.வீரமணி’ என்ற பெயரில் ஒரே ஒரு கணக்கு மட்டும் வைத்துள்ளார். அதில் முக்கிய தகவல்களை பதிவு செய்து வருகிறார்.

இந்தநிலையில், யாரோ சமூக விரோதிகள் சிலர் முகநூலில், ‘ஆசிரியர் கே.வீரமணி (தமிழர் தலைவர்)’ என்ற பெயரில் கணக்கை தொடங்கி, அதில் ஆபாச படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த பக்கத்தில் ஆபாச வார்த்தைகளை கொண்ட கருத்துகளை தெரிந்தவர்கள் மற்றும் தெரியாதவர்கள் பதிவு செய்கின்றனர்.

இதுபற்றி போலீஸ் கமிஷனரிடம் கடந்த ஜனவரி 20-ந்தேதி புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தந்தை பெரியார், கருணாநிதி குறித்து அவதூறாக பேசியவர்கள், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களுக்கு எதிராக திராவிடர் கழகத்தின் சார்பில் பல புகார்கள் கொடுத்தும், போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால், சைபர் கிரைம் சட்டம் இயற்றியதே வீண் என்றாகிவிடும்.

எனவே, என் புகார் மீது வழக்குப்பதிவு செய்யவும், முகநூல் போலிக்கணக்கை முடக்கவும் போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.குமாரதேவன் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்கும்படி போலீஸ் கமிஷனர், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

Next Story