அ.தி.மு.க.வில் மாநிலங்களவை எம்பி வேட்பாளர்கள் யார் யார்?


அ.தி.மு.க.வில்  மாநிலங்களவை எம்பி வேட்பாளர்கள் யார் யார்?
x
தினத்தந்தி 4 March 2020 5:36 AM GMT (Updated: 4 March 2020 5:36 AM GMT)

அ.தி.மு.க.வின் மாநிலங்களவை எம்.பி வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை

தமிழகத்தில் மொத்தம் உள்ள 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவி காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய எம்பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு எம்எல்ஏக்களின் பலம் அடிப்படையில் தலா 3 மாநிலங்களவை எம்பிக்களை போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.

தி.மு.க.வின் மாநிலங்களவை எம்பி  வேட்பாளர்களாக திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ மற்றும் முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் அ.தி.மு.க இன்னமும் அறிவிக்கவில்லை. எல்லாரும் கேட்பதால் ஆலோசித்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளது.

அ.தி.மு.க.வை பொருத்தவரை கூட்டணியில் உள்ள  கட்சி தலைவர்கள் சீட் கேட்டு வருகிறார்கள். கூட்டணியை விடுத்து  அ.தி.மு.க கட்சிக்குள் பார்த்தால் அ.தி.மு.க மூத்த தலைவர்களான தம்பித்துரை, கே.பி.முனுசாமி, மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் எம்பி சீட் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர்கள் சிலரும் தங்களுக்கு சீட் தர வேண்டும் என்று கேட்கிறார்களாம். இதேபோல், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க தலைவர்கள் எம்.பி சீட் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் வேட்பாளர் பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

கே.பி. முனுசாமி, அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளராகவும், மூத்த தலைவர்களுள் ஒருவராகவும் உள்ளார். ஆட்சியில் எந்த பொறுப்பும் இல்லாததால், அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்,  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் மக்களவை தேர்தலில் தோல்வியுற்ற நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகராக இருந்த, தம்பிதுரை, டெல்லி அரசியலுக்கு  பொருத்தமானவர் என்ற வகையில் அவருக்கு வாய்ப்பு வழங்க உள்ளதாக தெரிகிறது. 

இது ஒருபுறம் இருக்க கூட்டணி கட்சியினரான எ.சி. சண்முகம், தேதிமுகவின் சுதிஷ், த.மா.கா. ஜி.கே. வாசனும் வாய்ப்பு கேட்டு வந்தனர். இதில் ஜி.கே. வாசனுக்கு வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story