ரஜினி யாரிடமும் ஆலோசனை பெறவேண்டிய அவசியம் இல்லை - திருநாவுக்கரசர் எம்.பி.

அரசியல் குறித்து ரஜினி யாரிடமும் ஆலோசனை பெறவேண்டிய அவசியம் இல்லை என காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 5 ஆம் தேதி சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தினார். அப்போது கூட்டத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் குறித்து ரஜினி ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்தை பல்வேறு தரப்பினர் தொடர்ந்து சந்தித்த வண்ணம் உள்ளனர். நேற்று இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் ரஜினிகாந்தை சந்தித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்கள் பணியாற்ற ரஜினி ஆர்வமாக இருக்கிறார் என்று கூறினார்.
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் காங்கிரஸ் எம்பி., திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். அப்போது சட்டமன்ற தேர்தல், மன்றத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை உள்பட பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போயஸ் கார்டனில் ரஜினிகாந்தை சந்தித்த பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நான் என் பேரனின் பிறந்தநாள் சம்பந்தமாகப் பேச வந்தேன். குடும்ப விஷயமாக ரஜினியை சந்தித்தேன், அரசியல் குறித்து பேசவில்லை. அரசியல் குறித்து ரஜினி யாரிடமும் ஆலோசனை பெறவேண்டிய அவசியம் இல்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவரிடம் அதிமுக ராஜ்யசபா எம்பி சீட் ஜிகே வாசனுக்கு அளிக்கப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, 'மூப்பனார் நான் மதிக்கும் தலைவர். அதனால் அவர் மகன் வாசனுக்கு சீட் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி' என்றார்.
Related Tags :
Next Story