டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் பரிசோதனை செய்து கொள்ள முன் வரவேண்டும்; தமிழக அரசு வேண்டுகோள்


டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் பரிசோதனை செய்து கொள்ள முன் வரவேண்டும்; தமிழக அரசு வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 April 2020 10:35 AM GMT (Updated: 1 April 2020 10:35 AM GMT)

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் பரிசோதனை செய்து கொள்ள முன் வரவேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை,

டெல்லி நிஜாமுதீனில் கடந்த மார்ச் 8ந்தேதி முதல் 20ந்தேதி வரை மாநாடு ஒன்று நடைபெற்றது.  இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் மலேசியா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் சுமார் 1,700 பேர் கலந்து கொண்டனர்.

இதன்பின்பு அவர்களில் பலர் தங்கள் ஊருக்கு திரும்பி சென்றனர்.  இந்நிலையில், அவர்களில் 9 பேர் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மரணம் அடைந்ததாகவும், மேலும் டெல்லியை சேர்ந்த 24 பேர் அந்த நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையின் மூலம் தெரியவந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கூட்டம் நடந்த பகுதியில் தங்கி இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 335 பேருக்கு சளி, இருமல் இருந்ததால் அவர்கள் டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதற்கிடையே, கணிசமான பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் அவர்களுக்கும், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனால் அப்படி வந்துள்ளவர்கள் யார்-யார்? என்பது பற்றியும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றியும் அந்தந்த மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் நடந்த மாநாட்டில் மொத்தம் 1,500 பேர் கலந்து கொண்டனர். இதில் 1,131 பேர் தமிழகத்திற்கு திரும்பியிருந்தனர். அவர்களில் 515 பேரை சுகாதார அதிகாரிகள் கண்டுபிடித்து தனிமைப்படுத்தி உள்ளனர். கொரோனா பரவுவதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் நிஜாமுதீனுக்கு சென்ற அனைவரையும் கண்டுபிடிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த சூழலில், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.  அதில், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடம் கொரோனா தொற்று இருப்பதற்கான அபாயம் உள்ளது.

எனவே அவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள முன் வரவேண்டும் என்று தப்லிஹி ஜமாத் அமைப்பினரிடம் கேட்டு கொண்டுள்ளது.

இதேபோன்று அவர்கள், 7824849263, 044-46274411 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும் அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இந்நிலையில், டெல்லி மாநாட்டில் பங்கேற்ற தஞ்சையை சேர்ந்த 35க்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து பரிசோதனை மேற்கொண்டனர்.

Next Story