ஜூலை 3 வது வாரத்தில் இருந்து 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை? - பள்ளிக் கல்வித்துறை தகவல்


ஜூலை 3 வது வாரத்தில் இருந்து 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை? - பள்ளிக் கல்வித்துறை தகவல்
x
தினத்தந்தி 23 May 2020 1:30 PM GMT (Updated: 23 May 2020 1:30 PM GMT)

தமிழகத்தில் ஜூலை மூன்றாவது வாரம் முதல் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை,

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் மே 3 -ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்னும் நடைபெறவில்லை. கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், நிகழாண்டு  10 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறுமா?  என்ற சந்தேகங்கள் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் எழுந்தன. 

இதையடுத்து தமிழகத்தில் ஜூன் 15ஆம் தேதி முதல்  ஜூன் 25 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். 

தேர்வு முடிவுகள் ஜூலை 15 ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், ஜூலை மூன்றாவது வாரத்தில் இருந்து, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்றும், மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story