10ம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்கு விசாரணை 11ந்தேதிக்கு ஒத்திவைப்பு


10ம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்கு விசாரணை 11ந்தேதிக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 8 Jun 2020 1:41 PM GMT (Updated: 8 Jun 2020 1:41 PM GMT)

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை வருகிற 11ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு, ஜூன் 15ந்தேதி முதல் 25ந்தேதி வரை நடத்தப்படும் என்று தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் கூறினார்.  இதற்கான ஹால்டிக்கெட் வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தி வரும் சூழலில் தேர்வை நடத்துவதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.  10ம் வகுப்பு பொது தேர்வை கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று நீதிபதிகள் வினீஷ் கோத்தாரி, சுரேஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வை நடத்துவதில் அவசரம் காட்டும் அரசு மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

ஜூன் 15ந்தேதி பொதுத்தேர்வை தொடங்க அனுமதிக்க முடியாது. கொரோனா தொற்று பரவல் குறைந்தபின்னர் தேர்வை நடத்தலாம். ஜூலை 2வது வாரத்தில் தேர்வை நடத்தலாமா? என்பது குறித்து அரசு தெரிவிக்கவேண்டும். 10ம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்கும் முடிவை அரசே எடுத்தால் நன்றாக இருக்கும் என நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.

இதன்பின் மீண்டும் பிற்பகலில் வாதம் தொடர்ந்தது.  இதில், தமிழக அரசு தரப்பில், விஞ்ஞானிகள் அறிக்கைப்படி எதிர்வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டும்.  எனவே 10ம் வகுப்பு பொது தேர்வை நடத்த இதுவே சரியான தருணம்.

இந்தியாவில் 11 மாநிலங்கள் தேர்வை நடத்தி முடித்து விட்டன.  தேர்வை நடத்த மத்திய அரசும் அனுமதி தந்துள்ளது.  தேர்வு மையங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதிகள், மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு?  மாணவர் உயிரிழந்தால் இழப்பீடு வழங்குவதை தவிர வேறு என்ன உத்தரவாதம் வழங்கப்படும்? என்று தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசு தரப்பில், மாணவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று வாதம் முன்வைக்கப்பட்டது.  இனி வரும் நாட்களில் கொரோனா தொற்று பரவல் அதிகமாகும்.  பின்னாளில் தேர்வு நடத்துவது ஆபத்தானதாக இருக்கும்.  அதனால், 10ம் வகுப்பு பொது தேர்வை நடத்துவதற்கு இதுவே சரியான தருணம் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவது தொடர்பான வழக்கு விசாரணையை வருகிற 11ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவற்றுடன் சேர்த்து இந்த வழக்கையும் விசாரிக்க நீதிபதிகள் முடிவு செய்து உள்ளனர்.  இதுபற்றி விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Next Story