சாத்தான்குளம் போலீசாருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம்; சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


சாத்தான்குளம் போலீசாருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம்; சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 1 July 2020 12:15 AM GMT (Updated: 30 Jun 2020 10:09 PM GMT)

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் போலீசாருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என கருத்து தெரிவித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உடனடியாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

மதுரை,

சாத்தான்குளம் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் கைதாகி, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட சமயத்தில் இறந்த சம்பவம் இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை தொடர்ந்து சாத்தான்குளம் போலீசார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சி.பி.ஐ. விசாரணை

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் விசாரிக்கும் படியும், இந்த விசாரணைக்காக அவர் சாத்தான்குளத்தில் தங்கியிருக்கும்படியும் ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் சாத்தான்குளத்தில் விசாரணை நடத்தி வருகிறார். அவரது விசாரணையை மாவட்ட நீதிபதி கண்காணித்து வருகிறார். இதற்கிடையே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைப்பதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை

மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் சேகரிப்பில் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் ஈடுபட்ட சமயத்தில் அவரது விசாரணைக்குஇடையூறு ஏற்படுத்தும் வகையில் போலீசார் நடந்து கொண்டதாகவும், தரக்குறைவாக பேசியதாகவும் அவர் மதுரை ஐகோர்ட்டுக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக இருந்த குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன்,(இவர்கள் இருவரும் அவர்களின் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, நேற்று காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்) போலீஸ்காரர் மகாராஜன் ஆகிய 3 பேர் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கை மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பதிவு செய்தது. அந்த வழக்கு விசாரணைக்காக அவர்கள் 3 பேரும் மதுரை ஐகோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது.

நீதிபதிகள் முன் ஆஜர்

அதன்பேரில் நேற்று காலை 10.30 மணி அளவில் அவர்கள் 3 பேரும் மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு ஆஜரானார்கள். அவர்களுடன் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் ஆகியோரும் ஆஜரானார்கள்.

தாமதத்தை விரும்பவில்லை

பின்னர் நீதிபதிகள், “தந்தை-மகன் இறந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ. கையில் எடுக்கும் வரை நெல்லை டி.ஐ.ஜி. விசாரிக்கலாமா? அல்லது சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கலாமா? என அரசு தரப்பில் கேட்டு சற்று நேரத்தில் தெரிவியுங்கள்” என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் “பல்வேறு கட்ட அனுமதியை பெற்று சி.பி.ஐ. போலீசார் இந்த வழக்கின் விசாரணையை தொடங்குவதற்குள், சம்பவத்தின் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதாவது, காவல்துறையில் இருப்பவர்கள் அனைவரும் மோசமானவர்கள் அல்ல. ஒரு சிலரின் நடவடிக்கைகளால் இதுபோன்ற பிம்பம் ஏற்படுகிறது” என்று கூறி, விசாரணையை சிறிது நேரத்துக்கு ஒத்திவைத்தனர். அதன்பின் இந்த வழக்கு விசாரணை மதியம் 12 மணி அளவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. அனில்குமார்

அப்போது, “நெல்லை சரக டி.ஐ.ஜி.யிடம் இந்த வழக்கை ஒப்படைக்கலாம்” என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், “அவரின் கட்டுப்பாட்டில் 3 மாவட்டங்கள் வருகின்றன. தற்போதைய ஊரடங்கு சூழ்நிலையில் இந்த வழக்கை கையில் எடுப்பதால் அவருடைய வழக்கமான பணிகளை ஒத்திவைக்கக்கூடும். இந்த வழக்கை பொறுத்தவரை தாமதத்தை இந்த கோர்ட்டு விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கி உள்ளனர். ஒரு நொடி கூட வீணாகக்கூடாது. எனவே சி.பி.சி.ஐ.டி. நெல்லை துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார், இந்த வழக்கு விசாரணையை தற்காலிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்ட நீதிபதி, மாவட்ட நிர்வாகம், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் உரிய ஆவணங்களை உடனடியாக டி.எஸ்.பி.யிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் இன்றே அதை கையில் எடுக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் அவர்களின் உத்தரவில் கூறியிருந்ததாவது:-

கொலை வழக்குக்கு முகாந்திரம் உள்ளது

ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோரின் பிரேத பரிசோதனையின் முதல்கட்ட அறிக்கை மற்றும் கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டின் விசாரணை அறிக்கை ஆகியவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கையில், இறந்தவர்களின் உடல்களில் ஏராளமான மோசமான காயங்கள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அதேபோல ஜெயராஜ்-பென்னிக்ஸ் இறந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்ய சாத்தான்குளம் போலீஸ்நிலைய தலைமை காவலர் ரேவதியின் சாட்சியம் போதுமானதாக இருக்கும் என எண்ணுகிறோம். எனவே சாத்தான்குளம் போலீசாருக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது.

ரேவதி சாட்சி சொல்லும்போது மிகவும் அச்சமடைந்து காணப்பட்டுள்ளார். எனவே அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதை தூத்துக்குடி கலெக்டர் உறுதிப்படுத்த வேண்டும். மாஜிஸ்திரேட்டிடம் சாட்சியம் அளித்ததற்காக ரேவதிக்கு நீண்ட விடுப்பு வழங்கி, அவரை மிரட்ட நேரிடலாம்.

வெற்றிடத்தை நிரப்ப முடிவு

இந்த வழக்கில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க தாமதம் ஏன் என பலர் கருதலாம். இதுபோன்ற கருத்துகள் ஐகோர்ட்டு உத்தரவுகளை பிறப்பிக்க அழுத்தம் தருவதாக அமையாது. இதுவரை நம்பகமான தகவல்கள் இல்லாததால் வெறுமனே இருந்தோம்.

தற்போது இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளுக்கான சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே அவற்றின் மூலம் வெற்றிடத்தை நிரப்ப முடிவு செய்துள்ளோம். இறந்தவர்களின் குடும்பத்தினரின் கண்களில் இருந்து வழியும் கண்ணீரானது, சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. அனில்குமாரின் கண்களில் தெரியும் என நினைக்கிறோம். அதை மனதில் வைத்து இந்த வழக்கை அவர் விசாரிப்பார் எனவும் நம்புகிறோம்.

இந்த வழக்கை வருகிற 2-ந்தேதிக்கு (நாளை) ஒத்திவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தங்களின் உத்தரவில் கூறியுள்ளனர்.

Next Story