சென்னையில் உள்ள 400 சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் 60 நொடிகளாக குறைப்பு


சென்னையில் உள்ள 400 சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் 60 நொடிகளாக குறைப்பு
x
தினத்தந்தி 9 July 2020 8:24 AM GMT (Updated: 9 July 2020 8:24 AM GMT)

சென்னையில் உள்ள 400 சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் 60 நொடிகளாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. 

தமிழகத்தில் சென்னையில் தான் தினமும்  1,000 க்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.  சென்னையில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 72,500 ஆக உள்ளது. மேலும் ஊரடங்கில் சில தளர்வுகளை தளர்த்தி கடந்த இரு தினங்களுக்கு முன்பு அரசு அறிவித்தது. 

இதையடுத்து சென்னையில் பெரும்பாலான இடங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னையின் முக்கிய சாலைகளிலும் வாகனங்கள் பெருக்கெடுத்து ஓடின. இதனை தொடர்ந்து சென்னையில் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பியுள்ளது. 

இந்நிலையில், சென்னையின் முக்கிய சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் 60 நொடிகளுக்கு மேல் வாகன ஓட்டிகள் காத்திருப்பதால் கொரோனா பரவும் என அச்சம் காரணமாக காத்திருக்கும் நேரம் 60 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. இது சென்னையில் உள்ள 400 சிக்னல்களிலும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும் இன்று முதல் 10 போக்குவரத்து சிக்னல்களில் சோதனை முறை அமல்படுத்தபடுவதாகவும் போக்குவரத்து சிக்னல்களில் நெருங்கி நிற்பதும், அதன் மூலம் நோய் பரவுவதும் தடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story