சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் சிறைக்கு அனுப்பிவைப்பு


சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் சிறைக்கு அனுப்பிவைப்பு
x
தினத்தந்தி 16 July 2020 11:48 AM GMT (Updated: 16 July 2020 11:48 AM GMT)

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதான போலீசார் 4 பேரையும் வரும் 30 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தூத்துக்குடி,

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேர் சிபிஐ காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

கோர்ட்டு உத்தரவையடுத்து போலீசார் 5 பேரும், சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் 5 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, அங்கு 5 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதை தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் ஆஸ்பத்திரியில் இருந்து மதுரை ஆத்திகுளம் மெயின்ரோட்டில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். 3 நாட்களாக அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு அவர்களிடம்  தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டது.

5 போலீசாரின் சிபிஐ காவல் இன்றுடன் முடிந்த நிலையில், நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, போலீசார் 4 பேருக்கு மேலும் 15 நாட்கள் அதாவது ஜூலை 30 ஆம் தேதி வரை  நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.  காவலர் முத்துராஜ்-க்கு மட்டும் மேலும் 1 நாள் சிபிஐ காவல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story