கொரோனாவால் தாக்கப்பட்ட பெண்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது


கொரோனாவால் தாக்கப்பட்ட பெண்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 3 Aug 2020 12:29 AM GMT (Updated: 3 Aug 2020 1:30 AM GMT)

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 58 ஆயிரத்து 505 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,489 ஆண்கள், 2,386 பெண்கள் என மொத்தம் 5,875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,065 பேரும், செங்கல்பட்டில் 446 பேரும், காஞ்சீபுரத்தில் 393 பேரும், குறைந்தபட்சமாக தர்மபுரியில் 17 பேரும், நாகப்பட்டினத்தில் 16 பேரும், நீலகிரியில் 14 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 26 லட்சத்து 77 ஆயிரத்து 17 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 613 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 140 ஆண்களும், 1 லட்சத்து 1,446 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 27 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

அதில் 12 வயதுக்கு உட்பட்ட 12 ஆயிரத்து 790 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 32 ஆயிரத்து 234 முதியவர்களும் அடங்குவர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 75 பேரும், தனியார் மருத்துவமனையில் 23 பேரும் என 98 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் சென்னையில் 17 பேரும், திருவள்ளூரில் 8 பேரும், கோவையில் 7 பேரும், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், மதுரையில் தலா 6 பேரும், காஞ்சீபுரத்தில் 5 பேரும், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, தென்காசியில் தலா 4 பேரும், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சிவகங்கையில் தலா 3 பேரும், தர்மபுரி, திண்டுக்கல், திருப்பூர், வேலூரில் தலா 2 பேரும், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், தஞ்சாவூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 24 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது.  இதுவரையில் தமிழகத்தில் 4,132 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 517 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரையில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 483 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 56 ஆயிரத்து 998 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்களில் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்து உள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story