கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு; தென் மாவட்டங்களுக்கு இன்று எடப்பாடி பழனிசாமி பயணம்


கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு; தென் மாவட்டங்களுக்கு இன்று எடப்பாடி பழனிசாமி பயணம்
x
தினத்தந்தி 4 Aug 2020 7:56 PM GMT (Updated: 4 Aug 2020 7:56 PM GMT)

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இன்று (புதன்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயணம் மேற்கொண்டு, கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆய்வு மேற்கொள்கிறார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் நிலவி வருகிறது. அதன் தடுப்புப் பணிகள் பற்றி ஆய்வு செய்வதற்காக மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று வருகிறார். இன்று (5-ந் தேதி) பிற்பகல் 2 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சேலம் செல்கிறார். இரவில் சேலத்தில் தங்குகிறார்.

6-ந் தேதியன்று (நாளை) காலையில் சேலத்தில் இருந்து புறப்பட்டு கார் மூலம் திண்டுக்கல் செல்கிறார். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

திண்டுக்கல் கலெக்டர் மற்றும் பல அதிகாரிகளுடன் கொரோனா தடுப்புப் பணிகள் பற்றி ஆய்வு மேற்கொள்கிறார். அங்கு பல்வேறு அரசுத் திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், சிறு, குறு, நடுத்தர தொழில் பிரதிநிதிகள், விவசாயிகள், சுய உதவிக் குழுவினர் ஆகியோரை சந்தித்து உரையாற்றுகிறார்.

திண்டுக்கல்லில் இருந்து அன்று பிற்பகல் 2 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டுச் செல்கிறார். மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் பற்றிய ஆய்வை மேற்கொள்கிறார்.

அங்கும் விவசாயிகள், குறு, நடுத்தர தொழில் பிரதிநிதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசுகிறார். இரவில் மதுரையில் அவர் தங்குகிறார்.

மதுரையில் இருந்து 7-ந் தேதி காலை புறப்பட்டு நெல்லைக்கு செல்கிறார். நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அந்த மாவட்ட கலெக்டர், தென்காசி மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் அவர் ஆய்வு மேற்கொள்கிறார்.

அங்கும் அரசுத் திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதோடு, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். விவசாயிகள், குறு, நடுத்தர தொழில் பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுகிறார்.

7-ந் தேதி மாலையில் நெல்லையில் இருந்து புறப்பட்டு சேலத்துக்கு செல்கிறார். சேலத்தில் 8 மற்றும் 9-ந் தேதிகளில் தங்குகிறார். பின்னர் 10-ந் தேதி காலையில் சேலத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு சென்னைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிறார்.

Next Story