தூய்மையான நகரங்களுக்கான பட்டியலில் சென்னை தொடர்ந்து முன்னேற்றம்: இந்த ஆண்டு 45-வது இடம் கிடைத்தது


தூய்மையான நகரங்களுக்கான பட்டியலில் சென்னை தொடர்ந்து முன்னேற்றம்: இந்த ஆண்டு 45-வது இடம் கிடைத்தது
x
தினத்தந்தி 20 Aug 2020 8:45 PM GMT (Updated: 20 Aug 2020 8:21 PM GMT)

தூய்மையான நகரங்களுக்கான பட்டியலில் சென்னைக்கு இந்த ஆண்டு 45-வது இடம் கிடைத்துள்ளது.

சென்னை,

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு நடத்தப்பட்டு தூய்மை நகரங்களுக்கான பட்டியல் வெளியிடப்படும்.

அதன்படி இந்த ஆண்டு நாடு முழுவதும் 4 ஆயிரத்து 242 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் குப்பையை சிறந்த முறையில் பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்தல் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சிறந்த விருது கிடைத்து உள்ளது.

மேலும் தூய்மை நகர பட்டியலில் 45-வது இடத்தை சென்னை பிடித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சியில் தினசரி 4 ஆயிரத்து 200 டன் குப்பை சேகரமாகிறது. தற்போது கொரோனா காலத்தில் 3 ஆயிரத்து 200 டன்னாக குறைந்துள்ளது. இதனை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தூய்மை பணியாளர்கள் மூலம் பிரித்தெடுத்து பிளாஸ்டிக், உரம் தயாரிக்க மறுசுழற்சி செய்யப்படுகிறது. மேலும் தற்போது மின்சாரம், ‘பயோ கியாஸ்’, போன்ற தயாரிப்புகளுக்காக 3 ஆயிரம் டன் குப்பைகள் மறுசுழற்சி செய்யும் நடைமுறை இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஆய்வில் சென்னை 235-வது இடத்தையும், 2018-ம் ஆண்டு 100-வது இடத்தையும், 2019-ம் ஆண்டு 61-வது இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story