வீடுகளில் வைத்து வழிபடப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம் - சென்னை ஐகோர்ட் அனுமதி


வீடுகளில் வைத்து வழிபடப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம் - சென்னை ஐகோர்ட் அனுமதி
x
தினத்தந்தி 21 Aug 2020 7:51 AM GMT (Updated: 21 Aug 2020 7:51 AM GMT)

வீடுகளில் வைத்து வழிபடப்படும் விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்கலாம் என சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளது.

சென்னை,

விநாயகர் சதுர்த்தி விழா நாளை (சனிக் கிழமை) கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு கடந்த 13-ந் தேதி புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

அதன்படி, விநாயகர் சிலை ஊர்வலத்துக்கும், பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவலால் பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு மற்றும் ஊர்வலங்களுக்கு அரசு விதித்த தடைக்கு எதிரான மனுவில் இன்று சென்னை ஐகோர்ட் சில உத்தரவுகளை பிறப்பித்தது.

அதில், சென்னையில் மெரீனா கடற்கரையை தவிர்த்து பிற நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கலாம்.

தமிழகத்தில் வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை தனி நபர்கள் நீர்நிலைகளில் கரைக்கலாம்.

பொது இடங்களில் சிலைகள் வைக்கவும் ஊர்வலம் செல்லவும் அரசு விதித்த தடை செல்லும்.

விநாயகர் சதுர்த்திக்காக தளர்வுகள் அளிக்க இயலாது என தமிழக அரசு கூறியதை ஏற்று ஐகோர்ட் உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஊர்வலம் நடத்தப்படாது எனவும், முழு ஒத்துழைப்பு வழங்கவும் தயார் என இந்து முன்னணி, தமிழ்நாடு சிவசேனா கட்சி உத்தரவாதம் அளித்துள்ளன.

இதனை அடுத்து, விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் அனுமதி கோரிய  வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Next Story