3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா


3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Sep 2020 8:02 PM GMT (Updated: 12 Sep 2020 8:02 PM GMT)

சட்டசபை நாளை கூடுவதை முன்னிட்டு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பாதிப்பு இல்லை.

சென்னை, 

சட்டசபை நாளை கூடுவதை முன்னிட்டு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பாதிப்பு இல்லை. அதே நேரத்தில், 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை கூட்டம் நாளை (திங்கட்கிழமை) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார். இந்த கூட்டம் 3 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, சட்டசபை கூட்டத்திற்கான ஏற்பாடுகள் கலைவாணர் அரங்கத்தின் 3-வது மாடியில் உள்ள அரங்கத்தில் செய்யப்பட்டன. இதற்கிடையே, சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க உள்ள சபாநாயகர் ப.தனபால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், தலைமைச்செயலக ஊழியர்கள், சட்டசபை ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், போலீசார், பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையின் முடிவுகள் நேற்று வெளிவந்தது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க உள்ள அனைவருக்கும் சிறப்பு குழுவினர் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. சபாநாயகர், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், தலைமைச்செயலக ஊழியர்கள், சட்டசபை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில், சபாநாயகர், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற பரிசோதனையில் முதல்-அமைச்சரின் அலுவலக ஊழியர் ஒருவருக்கும், சட்டசபை செயலக ஊழியர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல், தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.பி. சண்முகநாதன், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்.சரஸ்வதி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. 3 பேரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.


Next Story