கரூர் அருகே கொரோனா பாதித்த மாணவருக்கு ‘நீட்’ தேர்வு எழுத அனுமதி மறுப்பு


representative image
x
representative image
தினத்தந்தி 13 Sep 2020 10:15 PM GMT (Updated: 13 Sep 2020 9:21 PM GMT)

கொரோனா பாதித்த மாணவருக்கு ‘நீட்’ தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.

கரூர், 

திருப்பூர் மாவட்டம், வெள்ளைகோவில் பகுதியை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் ஒருவர் கடந்த 9-ந் தேதி மூச்சுதிணறல் காரணமாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அவரது மகனான 19 வயது மாணவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி இருந்தது. இதையடுத்து அந்த மாணவர் கடந்த 11-ந் தேதி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர் ‘நீட்’ தேர்விற்கு விண்ணப்பித்திருந்தார். அவருக்கு கரூர் மாவட்டம், க.பரமத்தியில் உள்ள வி.எஸ்.பி. என்ஜினீயரிங் கல்லூரி தேர்வு மையமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து கொரோனா பாதித்தவர்களுக்கு ‘நீட்’ தேர்வு எழுத தனி அறை ஒதுக்கப்படும் என்று, அந்த மாணவர் நினைத்துள்ளார். அதனால் நேற்று காலை தனது ஊரில் இருந்து ஒரு காரில் தனது உறவினர் ஒருவருடன் க.பரமத்தி தேர்வு மையத்திற்கு வந்தார். இதையடுத்து மாணவர் காரிலேயே இருந்தார். அவரது உறவினர் மட்டும் கீழே இறங்கி சென்று, கல்லூரி வளாகத்தில் இருந்த ஒரு அதிகாரியிடம், மாணவரின் கொரோனா சான்றிதழை காண்பித்து தேர்வு எழுத தனி அறை ஒதுக்கும்படி கேட்டுள்ளார். இதனையடுத்து அதிகாரி தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை கொண்ட கையேட்டை எடுத்து பார்த்துள்ளார்.

அதில், தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மாற்று தேதியில் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் தற்போது கொரோனா பாதித்த மாணவர் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து உறவினர் சம்பந்தப்பட்ட மாணவரிடம் சென்று விளக்கி கூறினார். பின்னர் மாணவர் காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


Next Story