சொத்து குவிப்பு வழக்கு: வட்டார போக்குவரத்து அதிகாரி-மனைவிக்கு 4 ஆண்டு சிறை


சொத்து குவிப்பு வழக்கு: வட்டார போக்குவரத்து அதிகாரி-மனைவிக்கு 4 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 1 Oct 2020 11:35 PM GMT (Updated: 1 Oct 2020 11:35 PM GMT)

சொத்து குவிப்பு வழக்கில் வட்டார போக்குவரத்து அதிகாரி மற்றும் அவருடைய மனைவிக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

சிவகங்கை,

சிவகங்கையில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை வட்டார போக்குவரத்து அதிகாரியாக பணிபுரிந்தவர் மணி. இவர் அங்கு பணிபுரிந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமான சொத்துகளை தன்னுடைய மனைவி பெயரில் வாங்கி குவித்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமன்னன், இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், குமாரவேலு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா முகமது ஆகியோர் விசாரணை நடத்தி மணி (65) மற்றும் அவருடைய மனைவி ஷோபனா (60) ஆகியோர் மீது சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நேற்று நீதிபதி உதயவேலவன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் வட்டார போக்குவரத்து அதிகாரி மணி, அவருடைய மனைவி ஷோபனா ஆகிய 2 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

Next Story