மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளூர் மக்களே நியமிக்கப்படுவர் என அறிவிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளூர் மக்களே நியமிக்கப்படுவர் என அறிவிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Oct 2020 10:01 PM GMT (Updated: 7 Oct 2020 10:01 PM GMT)

மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளூர் மக்களே நியமிக்கப்படுவர் என அறிவிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணிகள் வட இந்தியர்களால் எவ்வாறு சூறையாடப்படுகின்றன? என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை வெளிப்படையாக சில கருத்துகளை தெரிவித்திருக்கிறது. ஐகோர்ட்டு தெரிவித்துள்ள கருத்துகள் சரியானவை; மிகவும் நியாயமானவை. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை பணிகளுக்கு நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள்; வட இந்தியர்களுக்கு விதிகளை மீறி முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதைத்தான் பா.ம.க. மீண்டும், மீண்டும் கூறிவருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உயர் அதிகாரிகள் தவிர்த்த பிற பணிகளில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை மட்டுமே நியமிப்பதன் மூலம் வட இந்தியர்கள் திட்டமிட்டு திணிக்கப்படுவதும், தேர்வுகளில் முறைகேடுகள் நடத்தப்படுவதும் தடுக்கப்படும்.

மேலும், மத்திய அரசு அலுவலகங்களை தமிழ்நாட்டு மக்கள் எளிதாக அணுகி சேவை பெறமுடியும். எனவே ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் அல்லாத பணிகளில் உள்ளூர் மக்களே நியமிக்கப்படுவர் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story