7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வுடன் இணைந்து போராட தயார் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வுடன் இணைந்து போராட தயார் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Oct 2020 11:20 PM GMT (Updated: 21 Oct 2020 11:20 PM GMT)

மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வுடன் இணைந்து போராட தயார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இதுதொடர்பாக தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அனைத்து கட்சிகளும் இணைந்து ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய பிறகும், தமிழக கவர்னர் இன்னும் அதற்கு அனுமதி வழங்காமல் தாமதித்து வருகிறார். மசோதாவுக்கு உரிய அங்கீகாரத்தை கவர்னர் உடனடியாக வழங்கவேண்டும் என்று அவருக்கு இன்று (நேற்று) கடிதம் எழுதி உள்ளேன். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைக்கப்பட்டிருக்கும் சட்டமன்றத்தின் உரிமை மற்றும் அதிகாரம் சம்பந்தப்பட்டதாகும்.

கவர்னர் இதில் மேலும் பாராமுகமும், தாமதமும் காட்டுவது நல்லதல்ல. இந்த நேர்வில் மாநில உரிமைகளுக்காக அ.தி.மு.க. அரசுடன் இணைந்து போராட தி.மு.க. தயாராக இருக்கிறது.

எனவே முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உடனடியாக அனைத்து கட்சிகளுடனும் கலந்து பேசி, என்னவகை போராட்டம், எந்த நாளில் என்பதை முடிவு செய்து அறிவித்திட முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ கனவினை சிதைக்கும் நீட் தேர்வினை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பது தி.மு.க.வின் தீர்மானமான கோரிக்கை என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அந்த கோரிக்கை நிறைவேறும் வரை, 2017-18-ம் கல்வியாண்டு முதல் நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து ஆராய, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலையரசன் தலைமையில் மூத்த வல்லுநர்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்த குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், “எம்.பி.பி.எஸ் மற்றும் நீட் தேர்வு மாநிலத்தில் தகுதித் தேர்வாக குறித்துரைக்கப்பட்டுள்ள பிற மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையில், தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் தகுதி பெற்ற அரசு பள்ளிகளின் மாணவர்களுக்கு முன்னுரிமை” அளிப்பதன் மூலம் அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் படித்த மாணவர்களுக்கிடையே ஒரு சமத்துவத்தைக் கொண்டு வரலாம் என தமிழக அரசால் முடிவு எடுக்கப்பட்டது.

அந்த முடிவின் அடிப்படையில், மருத்துவ கல்விக்கான நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு கடந்த 15.9.2020 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் கடந்த 16-ந் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால்தான் இந்த கல்வியாண்டிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கமுடியும்.

ஆகவே இந்த சட்ட முன்வடிவினை ஆதரித்து நிறைவேற்றிய பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வின் சார்பில் மேற்கண்ட சட்ட முன்வடிவிற்கு உடனடியாக தாங்கள் (கவர்னர்) ஒப்புதல் அளித்து அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை நிறைவேற்றிட முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

Next Story