எடப்பாடி பழனிசாமி ஆயுத பூஜை வாழ்த்து


எடப்பாடி பழனிசாமி ஆயுத பூஜை வாழ்த்து
x
தினத்தந்தி 24 Oct 2020 11:00 PM GMT (Updated: 24 Oct 2020 9:46 PM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளான ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜை திருநாளையும், அதற்கடுத்த பத்தாவது நாளில் விஜயதசமி திருநாளையும் பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மனித வாழ்வில் ஏற்றம் பெற ஆற்றல், செல்வம் மற்றும் கல்வி ஆகியவை இன்றியமையாதது ஆகும். மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் ஆற்றலில் மிகுந்து, செல்வத்தில் சிறந்து, கல்வியில் உயர்ந்து விளங்கிட மலைமகளையும், திருமகளையும், கலைமகளையும் போற்றி வணங்குவது நவராத்திரி பண்டிகையின் சிறப்பாகும்.

செய்யும் தொழிலே தெய்வம் என்று மதித்து, தொழிலின் மேன்மையை போற்றும் வகையில், மக்கள் தங்களது தொழிலுக்கு ஆதாரமாக விளங்குகின்ற தொழிற் கருவிகளை பூஜைக்குரிய பொருட்களாக வைத்து, மேன்மேலும் தொழில் வளர இறைவனை வேண்டி வழிபட்டு ஆயுத பூஜை திருநாளை கொண்டாடுவார்கள்.

விஜயதசமி திருநாளன்று தொடங்கப்படும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில், மக்கள் இறைவனை வணங்கி, கல்வி, கலை, தொழில் போன்ற நற்காரியங்களை தொடங்கி வெற்றித் திருநாளான விஜயதசமி திருநாளை கொண்டாடுவார்கள். இந்த சிறப்புமிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று, வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை இன்று கொண்டாடப்பட உள்ளதையொட்டி அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் ஏ.நாராயணன், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார், காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி தலைவர் மணி அரசன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Next Story