தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை ரூ.800 ஆக குறைக்க வேண்டும் - அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை


தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை ரூ.800 ஆக குறைக்க வேண்டும் - அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 2 Dec 2020 9:22 PM GMT (Updated: 2 Dec 2020 9:22 PM GMT)

பிற மாநிலங்களை போன்று தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை ரூ.800 ஆக குறைக்க வேண்டும் என்று அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டெல்லி, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா ஆய்வுக்கு ரூ.1,500 முதல் ரூ.2,400 வரை வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம், கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.800 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் ரூ.850, உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ.900 என்ற அளவில்தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த கட்டணம் குறைக்கப்பட்டு விட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் தனியார் ஆய்வு மையங்களில் 6 மாதங்களாக இதே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஆய்வுக்கான கருவிகளின் விலை தொடக்கத்தில் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது ஓர் ஆய்வுக்கான கருவியின் விலை ரூ.200 ஆக குறைந்துவிட்ட நிலையில், அதைவிட 15 மடங்கு கட்டணம் வசூலிப்பது நியாயமல்ல. 

எனவே, பொதுநலன் கருதி தமிழ்நாட்டில் தனியார் ஆய்வகங்களின் கொரோனா ஆய்வு கட்டணத்தை மற்ற மாநிலங்களுக்கு இணையாக ரூ.800 ஆக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story