குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று முதல் அனுமதி


குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று முதல் அனுமதி
x
தினத்தந்தி 15 Dec 2020 3:30 AM GMT (Updated: 15 Dec 2020 3:30 AM GMT)

குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தென்காசி,

கொரோனா தொற்று பரவல் காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 9 மாதங்களாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று குறைந்ததும் தமிழக அரசால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால், குற்றாலத்தில் மட்டும் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின் ஒருபகுதியாக குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகள் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது தமிழக அரசின் உத்தரவின்படி தெரிவிக்கப்பட்டுள்ள நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றி சுற்றுலா தலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. 

மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் குளிக்கலாம். சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள அரசின் அனைத்து நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story