வெள்ளப்பெருக்கு குறைந்தது: குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


வெள்ளப்பெருக்கு குறைந்தது: குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x
தினத்தந்தி 20 Dec 2020 8:49 PM GMT (Updated: 20 Dec 2020 8:49 PM GMT)

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் நேற்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் கடந்த 15-ந்்தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். 3 நாட்கள் மட்டுமே சுற்றுலா பயணிகள் குளித்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது.

மெயின் அருவியில் மட்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ச்சை தாண்டி விழுந்தது. இதனால் கடந்த 2 நாட்களாக இந்த அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. எனினும் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர்.

இந்த நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்து காணப்பட்டது. இதனால் காலை 6 மணியில் இருந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அங்கும் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர். மேலும் தற்போது சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் பலரும் குற்றாலம் அருவிகளில் குளித்து சென்றனர்.

Next Story