சீர்காழியில் தாய்,மகன் கொலை- கொள்ளை வழக்கில் கைதான வாலிபரின் கடையில் இருந்த பொருட்களை இரவோடு இரவாக எடுத்துச்சென்ற சகோதரர்


ராம்தயாள்
x
ராம்தயாள்
தினத்தந்தி 8 Feb 2021 6:58 AM IST (Updated: 8 Feb 2021 6:58 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் தாய், மகன் கொலை- கொள்ளை வழக்கில் கைதான வாலிபரின் கடையில் இருந்த பொருட்களை இரவோடு இரவாக அவருடைய சகோதரர் எடுத்துச்சென்றார். இந்த சம்பவத்தால் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கொலை- கொள்ளை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகைக்கடை நடத்தி வருபவர் தன்ராஜ் சவுத்ரி. இவருடைய மனைவி ஆஷா, மகன் அகில். கடந்த மாதம் 27-ந் தேதி காலை தன்ராஜ் சவுத்ரியின் வீட்டிற்குள் புகுந்த 3 வாலிபர்கள், தாய்- மகனை கொலை செய்து விட்டு, தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது, 3 பேரில் ஒருவன் போலீசாரின் என்கவுண்ட்டரில் பலியானான். மற்ற 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் பாட்டில்(வயது 27), மணிஷ்(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொருட்களை எடுத்துச்சென்றார்
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரமேஷ் பாட்டில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடை நடத்தி வந்ததும், மணிஷ் பிளைவுட் கடை நடத்தி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனால் இந்த சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் மணிஷ் நடத்தி வந்த பிளைவுட் கடையில் இருந்த பொருட்களை, அவரது சகோதரர் ராம்தயாள் நேற்று முன்தினம் இரவோடு இரவாக போலீசாரின் உதவியுடன் எடுத்துச்சென்றார். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசாரின் அறிவுறுத்தல் மற்றும் உதவியுடன் இரவோடு இரவாக அந்த கடையை காலி செய்ததாக கூறப்படுகிறது.

பரபரப்பு
இதற்கிடையே அந்த கடையில் இருந்து பொருட்கள் எடுத்துச்செல்வது பற்றி தகவல் அறிந்த பத்திரிகையாளர்கள், அது பற்றிய தகவல் சேகரிக்க அந்த கடையின் முன்பு குவிந்தனர். ராம்தயாள், நிருபர்களிடம் கூறுகையில், கொள்ளையன் ரமேஷிடம் சேரக்கூடாது, பேசக்கூடாது என்று மணிஷை கண்டித்ததாகவும், அதையும் மீறி மணிஷை ரமேஷ் அழைத்துச்சென்றதாகவும் தெரிவித்தார்.

அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார், பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் கூறுகையில், 4 நாட்களுக்கு முன்பு கடையை காலி செய்ய சொல்லியதாகவும், அவர்கள் தற்போதுதான் காலி செய்வதாகவும், கூறினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
1 More update

Next Story