முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு: தள்ளிவைத்தது சென்னை ஐகோர்ட்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 Jun 2021 12:30 PM GMT (Updated: 9 Jun 2021 12:30 PM GMT)

பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பை சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்தது.

சென்னை, 

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட நடிகை சாந்தினி புகார் ஒன்றை கொடுத்தார். இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என, நடிகை சாந்தினி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஜூன் 9ஆம் தேதி வரை மணிகண்டனைக் கைது செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தரப்பில், மணிகண்டன் 12 ஆண்டுகள் அரசு மருத்துவராகப் பணியாற்றி, பின் அரசியலுக்குள் நுழைந்துள்ளார். புகாரில் கூறியுள்ள குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை திருமணமானவர் எனத் தெரிந்துதான் அவருடன் நடிகை சாந்தினி குடும்பம் நடத்தியுள்ளார். நடிகையைக் காயப்படுத்தியதாகக் கூறுவதற்கு எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை. நடிகையைத் தெரியும். புகைப்படங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும். 

சாந்தினி, மணிகண்டனுடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார். இடைக்காலப் பாதுகாப்பாக முன்ஜாமீன் வழங்க வேண்டும். காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அறிமுகம் ஆன மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. கரு உருவாகும் முன் எப்படிக் கருக்கலைப்பு செய்ய முடியும்? மணிகண்டன் குற்றவாளி என்பதற்கு முகாந்திரம் இருந்தால் கைது செய்யட்டும். திருமணமாகாதவன் என்று அவரிடம் கூறவில்லை. அது அவருக்கும் தெரியும். அதனால் அவரை நம்பவைத்து ஏமாற்றியதாகக் கூற முடியாது. எந்த மிரட்டலும் விடுக்கவில்லை. ஏப்ரல் 15 வரை மணிகண்டனுடன் வசித்ததாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் தரப்பு விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கியிருக்க வேண்டும். ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தியிருக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில், விசாரணை ஆரம்பநிலையில் உள்ளது. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சாந்தினி மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மூன்று முறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. முக்கிய சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளது. ஆதாரங்கள் சேகரிக்க வேண்டியுள்ளது. முக்கியப் பதவியை வகித்ததால் சாட்சிகளைக் கலைக்கக்கூடும் என்று வாதிடப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எழுத்துபூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

Next Story