தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த வல்லுனர் குழு - அமைச்சர் மதிவேந்தன் பேச்சு


தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த வல்லுனர் குழு - அமைச்சர் மதிவேந்தன் பேச்சு
x
தினத்தந்தி 10 Jun 2021 8:57 PM GMT (Updated: 10 Jun 2021 8:57 PM GMT)

தமிழக அரசின் சுற்றுலாத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

சென்னை,

தமிழக அரசின் சுற்றுலாத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், சுற்றுலாத்துறை கமிஷனர் த.பொ.ராஜேஷ் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் அதிகாரிகளுக்கு அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கி பேசியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், சுற்றுலாவை நம்பி தொழில் செய்பவர்களின் வருவாயை அதிகரிப்பதற்கும் முதல்-அமைச்சரின் ஆலோசனையை பெற்று வல்லுனர் குழு அமைக்கப்பட வேண்டும். 

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் அழகினை இரவிலும் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் சீரொலி சீர்மிகு காட்சி அமைப்பதற்கும், பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் அமைந்துள்ள கலைக்கூடம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் திட்ட அறிக்கை தயார்ப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்ப்பதற்கும், உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story