வண்டலூர் சிங்கங்களையே மிரட்டும் புதிய உயிர்க்கொல்லி வைரஸ்! தனிமைபடுத்தி சிகிச்சை


வண்டலூர் சிங்கங்களையே மிரட்டும் புதிய உயிர்க்கொல்லி வைரஸ்! தனிமைபடுத்தி சிகிச்சை
x
தினத்தந்தி 12 Jun 2021 5:14 AM GMT (Updated: 12 Jun 2021 6:17 AM GMT)

வண்டலூர் பூங்கா சிங்கங்களுக்கு ஏற்பட்டது கொரோனா தொற்று இல்லை அதை விட அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும் கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் என்ற நோய் என தெரியவந்து உள்ளது.

சென்னை

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் மனிதர்களிடையே வேகமாக பரவ தொடங்கியது. விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை.  முதலில் அமெரிக்கா நியூயார்க் சிட்டியில் உள்ள டிரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் புலி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மே மாதம் முதல் முறையாக ஐதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வரும் காரணத்தால் சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஏப்ரல் மாதம் 20-ந்தேதி முதல் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 26-ந்தேதி  சென்னை வண்டலூரில் பூங்காவிலுள்ள சிங்கங்களுக்கு தொடர் இருமல் இருப்பது ஊழியர்கள் மூலம் தெரியவந்தது. அதன் பின்னர் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் அன்றைய தினமே உடல் சோர்வுடன் காணப்பட்ட சிங்கங்களின் சளி மாதிரிகள் சேகரித்து மத்திய பிரதேச மாநிலம் போபலில் உள்ள ஐ.சி.ஏ.ஆர். உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் தேசிய நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த பரிசோதனை முடிவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9 வயது உடைய நீலா என்ற பெண் சிங்கம் இறந்துவிட்டது. கவிதா (23), புவனா (19) என்ற 2 பெண் சிங்கங்களின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்து வருகிறது.

 19 வயது உடைய ராகவ் என்ற ஆண் சிங்கம் சார்ஸ் கோவிட்-2, டிஸ்டெம்பர் என்ற புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவ குழுவினர் அந்த சிங்கத்தை தனிமைப்படுத்தி தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த புதிய வகை தொற்று பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு பரவாமல் இருப்பதற்காக பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த புதிய வகை சார்ஸ் கோவிட்-2 டிஸ்டெம்பர் தொற்று வயது முதிர்ந்த விலங்குகளை விட, இளம் வயதுடைய விலங்குகளை அதிக அளவில் தாக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு இந்த புதிய வகை தொற்று பரவாமல் இருக்க தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவர் குழுவினர் பூங்கா நிர்வாகத்துடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல், மனித குலமே கண்ணீர் கடலில் மூழ்கி இருக்கும் நிலையில், வன விலங்குகளுக்கும் கொரோனா தொற்று பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதனால் சென்னைக்கு அருகே வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் சிங்கங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  கொரோனா தொற்றால் ஒரு பெண் சிங்கம் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. ஆனால் அதை விட விலங்குகளுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும் கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் எனும் இணை நோய் காணப்பட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் இந்த வைரசுக்கு நீலா எனும் பெண் சிங்கம் இறந்திருக்கிறது. மேலும் ஒரு சிங்கத்திற்கு  சிடிவி தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குஜராத்தின் கிர் காடுகளில் சில வருடங்களுக்கு முன்பு இந்த சிடிவி நோய்த் தொற்றுக்கு சிங்கங்களைத் தாக்கியது. அதில் 100க்கும் மேற்பட்ட சிங்கங்கள் பலியாகின.  இதே நிலை தமிழகத்திலும் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வன விலங்குகளின் இந்த அதிக ஆபத்து நிறைந்த சிடிவி வைரஸ்  பெரும்பாலும் நாய்களில் காணப்படுகிறது. உயிரியல் பூங்காவில் அதிகளவில் நாய் சுற்றித்திரிவதால் அதன் மூலம் மற்ற விலங்குகளுக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்சுகாதார இயக்குநர்  தினகர் ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு  சிடிவி தடுப்பூசி செலுத்துவதில்லை என்பதால்,  சிடி  வைரஸ் பாதிப்பைத் தடுக்க உயிரியல் பூங்காவில் சுற்றித்திரியும் நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது அவசியம் என்றும்  கூறினார்.  சிடிவி  வைரஸ் தொற்றால், 80 சதவீதம் அளவுக்கு இளம் விலங்குகளே பாதிக்கப்படுவதாகவும், வயதான விலங்களில் 50 சதவீதம்  பாதிக்கப்படுவதாகவும் தினகர் ராஜ் தெரிவித்தார்.

சிங்கங்களில் ஆப்பிரிக்க சிங்கம், ஆசியச் சிங்கம் என இரண்டு பிரிவுகள் உண்டு. ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட கண்டங்களில் பரவிக் காணப்பட்ட சிங்கங்கள் தற்போது ஆப்பிரிக்க கண்டம் மற்றும் இந்தியாவின் காடுகளுக்குள் சுருங்கி விட்டன. ஆப்பிரிக்க சிங்கம் அக்கண்டத்தின் பல பகுதிகளில் பரவி வாழ்கின்றன . ஆனால் ஆசியச் சிங்கங்கள் இந்தியாவின் கிர் காடுகளிலேயே அதிகம் காணப்படுகின்றன.

Next Story