நர்சுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக புகார்: விசாகா கமிட்டி விசாரிக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு


நர்சுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக புகார்: விசாகா கமிட்டி விசாரிக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 19 Jun 2021 2:02 AM GMT (Updated: 19 Jun 2021 2:02 AM GMT)

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் நர்சு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது.

மதுரை, 

நாகர்கோவிலில் ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்தேன். அங்கு மருந்தக அலுவலக சூப்பிரண்டாக உள்ள கிஷோர்குமார், அலுவலக உதவியாளர் தாணு ஆகியோர் என்னை பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தினர். இதுகுறித்து வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் எனது கணவரிடம் தெரிவித்தேன். அவரும் இ-மெயில் மூலமாக காவல்துறையினரிடமும், துறை ரீதியாகவும் புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், இனிமேல் இதுபோல் நடக்காது. அவர்களை எச்சரித்து விட்டோம் என கூறினர். ஆனாலும் தொடர்ந்து எனக்கு அவர்கள் பல்வேறு தொல்லைகளை தொடர்ந்து அளித்து வருகின்றனர். எனவே அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்கும் விசாகா கமிட்டி மூலம் விசாரணை நடத்தி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி வேலுமணி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர், மண்டல மருத்துவ அதிகாரி உள்ளிட்டவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.

Next Story