சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபரிடம் போலீஸ் விசாரணை


சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபரிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 20 Jun 2021 7:25 PM GMT (Updated: 20 Jun 2021 7:25 PM GMT)

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய மேலாளா் அறைக்கு நேற்று அதிகாலையில் மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர், “சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. அது காலைக்குள் வெடித்து சிதறும்” என்று கூறிவிட்டு போன் இணைப்பு துண்டித்து விட்டார்.

உடனடியாக விமான நிலைய மேலாளா், இதுபற்றி விமான நிலைய உயா் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.

வாலிபரிடம் விசாரணை

அதன்பேரில் விமான நிலைய வெடிகுண்டு நிபுணா்கள், பாதுகாப்பு படையினா் மற்றும் போலீசாா் இணைந்து உள்நாட்டு விமான நிலையம், பன்னாட்டு விமான நிலையம், காா் பாா்க்கிங் உள்பட விமான நிலைய வளாகம் முழுவதும் தீவிரமாக சோதனை செய்தனா். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர்தான் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

சென்னை விமான நிலைய போலீஸ் உதவி கமிஷனர் நடேசன் தலைமையிலான போலீசார், மேலாளா் அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை வைத்து விசாரித்தனர். அதில் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த அருள் ராபர்ட் (வயது 28) என தெரியவந்தது. அருள் ராபர்ட்டிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story