சசிகலாவுடன் பேசியதால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவரின் சொகுசு கார் எரிப்பு


சசிகலாவுடன் பேசியதால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவரின் சொகுசு கார் எரிப்பு
x
தினத்தந்தி 21 Jun 2021 10:23 PM GMT (Updated: 21 Jun 2021 10:23 PM GMT)

சசிகலாவுடன் பேசியதால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவரின் சொகுசு காரை 2 பேர் தீவைத்து எரித்தனர். இதுதொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பரபரப்பு காட்சிகள் பதிவாகி உள்ளன.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காமராஜர் நகரை சேர்ந்தவர் வின்சென்ட் ராஜா (வயது 43). இவர் அ.தி.மு.க.வில் ராமநாதபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு வின்சென்ட் ராஜா, சசிகலா போனில் பேசிக்கொண்ட உரையாடல் ஆடியோ வெளியானது. அதைத்தொடர்ந்து அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

வின்சென்ட் ராஜா, பரமக்குடி அருகே உள்ள மேலக்காவனூரில் தார் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். அங்கு பணியாற்றும் காவலாளி, கடந்த ஒரு வாரமாக பணிக்கு வராததால் நேற்று முன்தினம் இரவு வின்சென்ட் ராஜா மட்டும் அங்கு தங்கினார்.

சொகுசு கார் எரிந்தது

நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டது. உடனே திடுக்கிட்டு எழுந்த வின்சென்ட்ராஜா, வெளியே பார்த்துள்ளார். அப்போது கட்டிடத்தின் வெளிப்புறம் நிறுத்தப்பட்டு இருந்த அவரது சொகுசு கார் தீயில் எரிந்து கொண்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வின்சென்ட் ராஜா உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

தீ வைத்த ஆசாமிகள்

ஆனாலும், கார் முற்றிலும் எரிந்து சேதமானது. அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் பார்த்தபோது, 2 மர்ம நபர்கள் முகமூடி அணிந்துகொண்டு சுற்றுச்சுவரில் ஏறி குதித்து ஆலைக்குள் வந்ததும், பின்னர் வின்சென்ட் ராஜாவின் காரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததும் பதிவாகி உள்ளது. இதை வைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சசிகலாவுடன் செல்போனில் பேசியதால் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தனது கார் எரிக்கப்பட்டுள்ளதாகவும், வின்சென்ட் ராஜா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

Next Story