தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா


தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா
x
தினத்தந்தி 24 Jun 2021 4:18 AM GMT (Updated: 24 Jun 2021 4:18 AM GMT)

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சீனாவின் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. அந்தவகையில் பல நாடுகளில் உருமாறிய வைரஸ் பரவல் காணப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் சமீபத்தில் புதிய வகை மாறுபாடு கண்டறியப்பட்டது. இதற்கு டெல்டா என பெயரிடப்பட்டு இருக்கிறது. இது வேறு பல நாடுகளில் பரவி வருவதும் கண்டறியப்பட்டது.

கொரோனாவின் மற்றொரு மாறுபாடான இந்த டெல்டா பிளஸ் தொற்று (ஏ.ஒய்.1) அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டு இருக்கிறது. இது இந்தியாவிலும் தனது வேலையை காட்டி வருகிறது. அந்தவகையில் மராட்டியம், கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் 40 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. 

இந்தநிலையில் தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெல்டா பிளஸ் கொரோனா பாதித்த சென்னை பெண் குணமடைந்து விட்டார். டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் நலமுடன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

Next Story