தமிழகத்தில் 5,415 பேருக்கு கொரோனா பாதிப்பு; அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு


தமிழகத்தில் 5,415 பேருக்கு கொரோனா பாதிப்பு; அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Jun 2021 2:49 PM GMT (Updated: 27 Jun 2021 1:01 AM GMT)

தமிழகத்தில் 5,415 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று சரிவு வேகமாக இருந்த நிலையில், தற்போது அதன் வேகம் குறைந்து வருகிறது. அந்தவகையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 68 ஆயிரத்து 409 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3,069 ஆண்கள், 2,346 பெண்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 415 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 205 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 782 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 671 பேரும், ஈரோட்டில் 574 பேரும், சேலத்தில் 369 பேரும், சென்னையில் 314 பேரும், திருப்பூரில் 337 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரம், பெரம்பலூரில் தலா 31 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 13 லட்சத்து 55 ஆயிரத்து 230 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 14 லட்சத்து 38 ஆயிரத்து 799 ஆண்களும், 10 லட்சத்து 21 ஆயிரத்து 910 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 24 லட்சத்து 60 ஆயிரத்து 747 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 89 ஆயிரத்து 55 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 54 ஆயிரத்து 624 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 100 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 48 பேரும் என 148 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அந்தவகையில் தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 19 பேரும், ஈரோட்டில் 13 பேரும், சேலத்தில் 11 பேரும், கோவை, சென்னையில் தலா 9 பேர் உள்பட நேற்று மட்டும் 30 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 17 பேர் இணை நோய் அல்லாதவர்கள் ஆவர். அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 32 ஆயிரத்து 199 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளில் 10 ஆயிரத்து 637 பேரும், ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகளில் 5 ஆயிரத்து 130 பேரும், ஐ.சி.யு படுக்கைகளில் 4 ஆயிரத்து 407 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று 38 ஆயிரத்து 251 ஆக்சிஜன் படுக்கைகள், 26 ஆயிரத்து 559 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 5 ஆயிரத்து 587 ஐ.சி.யு படுக்கைகள் என மொத்தம் 70 ஆயிரத்து 397 படுக்கைகள் ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ளது. அதேபோல், கொரோனா பராமரிப்பு மையங்களில் 7 ஆயிரத்து 618 பேர் சிகிச்சையில் உள்ளனர். அந்தவகையில் 58 ஆயிரத்து 438 படுக்கைகள் காலியாக இருக்கின்றன.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 7,661 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 1,263 பேரும், ஈரோட்டில் 748 பேரும், திருப்பூரில் 448 பேரும், சேலத்தில் 620 பேரும் அடங்குவர். இதுவரையில் 23 லட்சத்து 83 ஆயிரத்து 624 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 44 ஆயிரத்து 924 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story