கள்ளத்தொடர்பு அம்பலமானதால் அவமானத்தில் தூக்கில் தொங்கினார்; 3 பேர் கைது


கள்ளத்தொடர்பு அம்பலமானதால் அவமானத்தில் தூக்கில் தொங்கினார்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 6 July 2021 10:31 PM GMT (Updated: 6 July 2021 10:31 PM GMT)

பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. கள்ளத்தொடர்பு அம்பலமானதால் அவமானத்தில் அந்த பெண் தூக்கில் தொங்கியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

தூக்குப்போட்டு தற்கொலை
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 31). இவருக்கும், பட்டுக்கோட்டை அருகே உள்ள திட்டக்குடி கிராமத்தை சேர்ந்த தமிழழகிக்கும் (26) கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.பாலமுருகன் சிங்கப்பூர் சென்று அங்கு வேலை பார்த்து வருகிறார். தனது மாமனார், மாமியாருடன் வசித்து வந்த தமிழழகி கடந்த 4-ந் தேதி இரவு தான் குடியிருந்து வந்த வாடகை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சாவில் மர்மம் என தந்தை புகார்
வரதட்சனை கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் எனவும், அவரது சாவில் உள்ள மர்மம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் இறந்த தமிழழகியின் தந்தை திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பாலச்சந்தர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

3 பேருடன் கள்ளத்தொடர்பு
இந்த நிலையில் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் தமிழழகியின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது தமிழழகியின் உள்ளாடையில் ஒரு கடிதம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.அந்த கடிதத்தில் தன்னுடன் 3 பேர் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும், அந்த 3 பேரின் பெயர்களையும் தமிழழகி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது தெரிய வந்தது.போலீசாரின் தீவிர விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட தமிழழகிக்கும், 3 பேருக்கும் தொடர்பு இருந்து உள்ளது. இந்த கள்ளத்தொடர்பு வெளியில் தெரிந்ததால் அவமானம் அடைந்த தமிழழகி தூக்கில் தொங்கியது தெரிய வந்தது.

3 பேர் கைது
தமிழழகியின் தற்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என இருவீட்டாரின் உறவினர்களும் மறுத்து விட்டனர்.இதனைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஆவணம் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் (வயது 21), அதே பகுதியில் டீக்கடை நடத்தி வரும் கண்ணன் என்பவரின் மகன் மணிகண்டன் (28)) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 3 பேர் மீதும் 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) 306 எஸ்.சி. எஸ்.டி (வன்கொடுமை தடுப்பு சட்டம்) ஆகிய பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை நேற்று கைது செய்தனர்.

Next Story