கள்ளக்காதலியுடன் தனிமையில் இருந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை கணவர் பிடிக்க முயன்றதால் விபரீத முடிவு

மதுரையில் கள்ளக்காதலியுடன் தனிமையில் இருந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர்கள் இருவரையும் அந்த பெண்ணின் கணவர் கையும், களவுமாக பிடிக்க முயன்றதால் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மதுரை,
மதுரை அண்ணாநகர் கரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் சிவசக்தி (வயது 43), ஓட்டல் தொழிலாளி. இவருடைய மனைவி சுப்புலட்சுமி (32), இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சுப்புலட்சுமி கணவருடன் கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநிலையில், மதுரை பாலமேட்டை சேர்ந்த செல்வகுமார் (27) என்பவருக்கும், சுப்புலட்சுமிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
நேற்று சிவசக்தி மனைவியை தேடி அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டில் சுப்புலட்சுமியுடன், செல்வகுமார் தனிமையில் இருந்தார். இதை கண்டு சிவசக்தி அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவரிடம் சுப்புலட்சுமி, உங்களுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றும், இனி மேல் வீட்டிற்கு வரக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
அதை தொடர்ந்து, அவர்கள் இருவரையும் கையும், களவுமாக பிடிக்க நினைத்து சிவசக்தி சத்தம் போட்டுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு கூடி விட்டனர். மேலும் மனைவியின் கள்ளக்காதல் பற்றி தெரிவித்து போலீசாரையும் சிவசக்தி அழைத்துள்ளார். மேலும் கள்ளக்காதலன் செல்வகுமாரை வெளியே செல்லவும் விடவில்லை.
இதனால் செல்வகுமார் அதிர்ச்சி அடைந்தார். மேலும் போலீசாரிடம் சிக்கினால் தனக்கு அவமானம் என்று நினைத்து வீட்டிற்குள் சென்று அறையை பூட்டிக் கொண்டு செல்வகுமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story