நீட் தேர்வை தவிர்க்க முடியாது: மருத்துவ படிப்பில் தமிழ்வழி கல்வி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு - டாக்டர்கள் சங்கம் ஆலோசனை

மருத்துவ படிப்பில் தமிழ்வழி கல்வி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கலாம் டாக்டர்கள் சங்கம் ஆலோசனை. சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது.
சென்னை,
‘நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் தமிழக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால் நடப்பாண்டு நீட் தேர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வேறு சில நடவடிக்கைகள் மூலம் மாணவர்களுக்கான இழப்பை தமிழக அரசு சரி செய்யலாம். குறிப்பாக தமிழ்வழி கல்வியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் தனி இடஒதுக்கீடு வழங்கலாம். அதற்கான சட்டத்தை உடனடியாக மாநில அரசு இயற்ற வேண்டும். இதேபோல், அனைத்து தொழிற்கல்வி மற்றும் உயர்கல்வியில் தனி இடஒதுக்கீடு அளிக்கலாம்.
நீட் தேர்வை பொறுத்தவரையில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஆள்மாறாட்டம் உள்பட சில முறைகேடுகளை தடுக்க, தேர்வர்களின் நீட் மதிப்பெண் பட்டியல், அவர்களின் பதிவு எண், ஆதார் எண் ஆகியவற்றையும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) வெளியிட வேண்டும்.
மருத்துவ மாணவர் சேர்க்கையை பொறுத்தவரையில், மத்திய-மாநில அரசுகள் தான் நடத்த வேண்டும். கடைசி நேரத்தில் தனியார் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி அளிப்பது சரியானதாக இருக்காது. மேலும் தனியார் கல்லூரி, நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story