பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது காரில் 'லிப்ட்' கொடுத்து பெண்களிடம் நகை பறிப்பு ஆசாமிக்கு வலைவீச்சு


பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது காரில் லிப்ட் கொடுத்து பெண்களிடம் நகை பறிப்பு ஆசாமிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 23 July 2021 11:20 PM GMT (Updated: 23 July 2021 11:20 PM GMT)

பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண்களுக்கு காரில் ‘லிப்ட்' போது 10 பவுன் நகையை பறித்து தப்பிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர்,

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் முருகா ரெட்டி தெருவை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி சுஜாதா (வயது 45). இவருடைய உறவினர் சென்னையைச் சேர்ந்த மூர்த்தியின் மனைவி சிவபூஷணம் (67). இவர்கள் இருவரும் குடியாத்தம் அருகே ரோஸ்பேட்டையில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்காக சோளிங்கர் பஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் வந்தனர். பஸ் நிலையத்திற்கு வெளியே பஸ்சுக்காக காத்திருந்தனர்‌.

அப்போது சிவப்பு நிற காரில் வந்த ஒருவர் அவர்களிடம் எங்கு செல்கிறீர்கள்? என கேட்டுள்ளார். அப்போது சுஜாதா குடியாத்தம் செல்வதாக கூறினார். அந்த டிரைவர் நான் பள்ளிகொண்டா தாண்டி செல்கிறேன். பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே தங்களை இறக்கி விடுகிறேன். அங்கிருந்து குடியாத்தத்துக்கு எளிதாக நீங்கள் செல்லலாம். எனக்கு ரூ.150 கொடுத்தால் போதும் என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பி சுஜாதாவும், சிவபூஷணமும் காரில் ஏறினர்.

நகை பறிப்பு

கார் வேலூர் நகர எல்லையை தாண்டிய பின்னர் திடீரென அந்த டிரைவர் ஒருகையில் காரை ஓட்டிக்கொண்டே சிவபூஷணம் மற்றும் சுஜாதா இருவரையும் தாக்கி அவர்கள் அணிந்திருந்த நகைகளை பறித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் காரில் இருந்தபடியே திருடன்...திருடன்... என்று கூச்சலிட்டனர். சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் இடத்தில் வந்த போது, சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக கார் மெதுவாக சென்றது. அப்போது சுஜாதா காரின் கதவைத் திறந்து கொண்டு வெளியே குதித்தார். சாலையில் உருண்டு விழுந்து அவர் அலறி கூச்சலிட்டார். காரில் இருந்த சிவபூஷணமும் கைகளை வெளியே நீட்டி உதவி கேட்டார். இதனால் அந்த டிரைவர் சிவபூஷணத்தை ஓடும் காரில் இருந்து வெளியே தள்ளிவிட்டு காரை ஓட்டினார். இதை கவனித்த அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் காரை மடக்கி பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் பேரிகார்டுகள் மீது மோதிவிட்டு அந்த கார் வாலாஜா நோக்கி வேகமாக சென்றுவிட்டது.

10 பவுன் நகை

காரில் இருந்து விழுந்த 2 பெண்களுக்கும் தலை, கை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த சத்துவாச்சாரி போலீசார் பெண்கள் இருவரையும் மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் காரில் வந்த மர்ம நபர் லிப்ட் கொடுப்பது போல நடித்து, தங்களை தாக்கிவிட்டு 10 பவுன் நகைகளை பறித்து சென்றுவிட்டதாக இருவரும் புகார் அளித்தனர். போலீசார் இந்த துணிகர நகைபறிப்பில் ஈடுபட்ட ஆசாமியை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story