சென்னையில் கொரோனா ஊரடங்கு தடை மீறல்: வாகனங்கள் பறிமுதல்; வழக்கு பதிவு


சென்னையில் கொரோனா ஊரடங்கு தடை மீறல்:  வாகனங்கள் பறிமுதல்; வழக்கு பதிவு
x
தினத்தந்தி 24 July 2021 8:44 PM GMT (Updated: 24 July 2021 8:44 PM GMT)

சென்னையில் கொரோனா ஊரடங்கு தடையை மீறிய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.



சென்னை,

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ள நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் முறையான தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்பேரில், சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகளில் வாகன தணிக்கை சாவடிகள் அமைத்து கண்காணித்து, தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, சென்னை போலீசார் நேற்று முன்தினம் மேற்கொண்ட வாகன சோதனையில் கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 324 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 404 இருசக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள் மற்றும் 1 இலகுரக வாகனம் என மொத்தம் 411 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர, முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 1,035 வழக்குகளும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது தொடர்பாக 18 வழக்குகளும் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.


Next Story