சென்னை விமான நிலையத்தில் அமைச்சருடன் சப்-இன்ஸ்பெக்டர் வாக்குவாதம்


சென்னை விமான நிலையத்தில் அமைச்சருடன் சப்-இன்ஸ்பெக்டர் வாக்குவாதம்
x
தினத்தந்தி 30 Sep 2021 7:41 PM GMT (Updated: 30 Sep 2021 7:41 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி செல்ல வந்த அமைச்சரிடம் ஏன் லேப்டாப், ஐபேடு கொண்டு செல்கிறீர்கள்? என மத்திய தொழில் பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சென்னை, 

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக நேற்று காலை தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் விமான நிலையம் வந்தாா். விமானத்தில் ஏறும் முன்பாக பாதுகாப்பு சோதனை பிரிவில் அமைச்சரின் கைப்பையை ‘ஸ்கேன்’ மூலம் மத்திய தொழில் பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பரிசோதித்தாா்.

அமைச்சரின் கைப்பையில் லேப்டாப் மற்றும் ஐபேடு வைத்திருந்தாா். அதை பாா்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர், அமைச்சரிடம் லேப்டாப் மற்றும் ஐபேடு ஏன் எடுத்துச்செல்கிறீா்கள்? என்று கேட்டாா்.

அதற்கு அமைச்சா், “நான் மாநில நிதி அமைச்சா். எனது அவசர தேவைக்காக எடுத்து செல்கிறேன். இரண்டையும் எடுத்து செல்லக்கூடாது என சட்டம் உள்ளதா?” என்றாா். ஆனால் அதை ஏற்று கொள்ளாத சப்-இன்ஸ்பெக்டர், அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். பதிலுக்கு அமைச்சரும் அவருடன் வாக்குவாதம் செய்தாா்.

அந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு தமிழ் தெரியவில்லை. ஆங்கிலமும் சரியாக புரியவில்லை. இந்தி மட்டுமே பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சரும் இந்தியில் விளக்கம் கேட்டார். விமானத்துக்கு நேரம் ஆகிறது. இவற்றை நீங்களே வைத்து கொள்ளுங்கள் என கூறி உள்ளே செல்ல முயன்றார்.

உடனே விமானநிலைய உயா் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அங்கு வந்து அமைச்சரை சமாதானப்படுத்தினா்.

அப்போது அமைச்சா், அதிகாரிகளிடம் பயணிகளுக்கு உதவி செய்ய தான் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனா். அவா்களுக்கு தொல்லை கொடுப்பதற்காக அல்ல. பயணி ஒருவா் லேப்டாப் மற்றும் ஐபேடு ஒன்றாக விமானத்தில் எடுத்து செல்லக்கூடாது என்று ஏதாவது விதிமுறை உள்ளதா? என்று கேட்டாா்.

அதற்கு அப்படி எந்த விதிமுறையும் கிடையாது என்று கூறிய அதிகாரிகள், நடந்த சம்பவத்துக்கு அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டனா். அமைச்சரிடம் வாக்குவாதம் செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டரும் மன்னிப்பு கேட்டாா்.

இதையடுத்து அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், சமாதானமாகி விமானத்தில் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றாா். இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் கடந்த ஆண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் அதிகாரி ஒருவா் தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் பாதுகாப்பு சோதனை பிரிவில் மொழி பிரச்சினை செய்தது பெரும் சா்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story