குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் முற்றுகை


குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் முற்றுகை
x
தினத்தந்தி 1 Oct 2021 7:40 PM GMT (Updated: 1 Oct 2021 7:40 PM GMT)

புதுச்சேரி குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி, அக்.2-
புதுச்சேரி புதிய பஸ்நிலையம் எதிரே பெரியார் நகரில் குடிசை மாற்று வாரிய அலுவலகம் உள்ளது. இங்கு பணிபுரியும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு உயர் அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமையில் நேற்று குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இது பற்றிய தகவல் அறிந்த உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதன்பேரில், அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story