தமிழக பா.ஜ.க. தலைவர் உள்பட 600 பேர் மீது வழக்கு பதிவு


தமிழக பா.ஜ.க. தலைவர் உள்பட 600 பேர் மீது வழக்கு பதிவு
x
தினத்தந்தி 8 Oct 2021 6:25 AM GMT (Updated: 8 Oct 2021 6:25 AM GMT)

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட 600 பேர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.  பொதுமக்கள் கூட்டம் கூடாமல் தவிர்க்கவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அரசு கூறியுள்ளது.  எனினும், இதனை கண்டித்து தமிழக பா.ஜ.க. சார்பில் மாநிலம் முழுவதும் 12 முக்கிய இடங்களில் கோவில்கள் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை பாரிமுனையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அவர் பேசும்போது, இல்லாத கொரோனாவை காரணம் காட்டி கோவில்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளை திறந்த நிலையில் கோவில்களை திறக்காதது ஏன்?

தியேட்டரில் மட்டும் கொரோனா பரவாதா? தி.மு.க.வின் சித்தாந்தத்தை எங்களது பூஜை அறைக்கும் கோவில்களுக்கும் கொண்டு வராதீர்கள் என்றார். மேலும், மதத்தை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்றும் கூறினார்.

கோவில்களை திறக்க வலியுறுத்தி பல்வேறு முழக்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.  இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி. செல்வம் உள்ளிட்ட 600 பேர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் சூழலில், விதிகளை மீறி கூட்டம் கூட்டிய நிலையில், அவர்கள் மீது தொற்று நோய் தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் கடற்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதேபோன்று, கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மீது பந்தயசாலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story