கொளத்தூர் தொகுதியில் 560 பயனாளிகளுக்கு ரூ.2¾ கோடி நலத்திட்ட உதவிகள் - மு.க.ஸ்டாலின் வழங்கினார்


கொளத்தூர் தொகுதியில் 560 பயனாளிகளுக்கு ரூ.2¾ கோடி நலத்திட்ட உதவிகள் - மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x
தினத்தந்தி 16 Oct 2021 7:53 PM GMT (Updated: 16 Oct 2021 8:03 PM GMT)

கொளத்தூர் தொகுதியில் 560 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை,

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எவர்வின் பள்ளியில் நேற்று பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 16 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி, 2 பயனாளிகளுக்கு வங்கி கடன் மானியம், 5 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்கள், 197 பயனாளிகளுக்கு முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள், சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்தைச் சேர்ந்த 312 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி, 5 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி, கொரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்த 18 குழந்தைகளுக்கு நிவாரண நிதி என மொத்தம் 560 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, கொளத்தூர், பெரியார் நகர், மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் ஆஸ்பத்திரியின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் வழங்கப்பட்ட ஒரு அவசரகால ஊர்தியையும், கொரோனா தடுப்பூசி பணிக்காக 2 வாகனங்களின் சேவைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து, 210 பேர் அமரக்கூடிய 3 இருக்கைகள் கொண்ட 70 நாற்காலிகளையும் ஆஸ்பத்திரியின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.

பின்னர், கொளத்தூர், ஜி.கே.எம்.காலனியில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, 34 ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்தார்.

மேலும், அப்பள்ளிக்கு கட்டிடம் கட்டுவதற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் கே.வி.ராமமூர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

அத்துடன் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் 1,500 மாணவர்கள் அமரும் வகையில் ரூ.25 லட்சம் மதிப்பில் அளிக்கப்பட்ட மேஜைகள் மற்றும் நாற்காலிகளையும் பள்ளியின் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திரு.வி.க நகர் மண்டலம், கொளத்தூர் பள்ளி சாலையில் உள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்களின் உயிர்காக்கும் உன்னத திட்டமான கருணாநிதியின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமையும் முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி., தாயகம் கவி எம்.எல்.ஏ, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, சென்னை மாவட்ட கலெக்டர் விஜயராணி, அரசு உயர் அலுவலர்கள், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story