தமிழகத்தில் 1,218 பேருக்கு கொரோனா: 30 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை


தமிழகத்தில் 1,218 பேருக்கு கொரோனா: 30 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை
x
தினத்தந்தி 17 Oct 2021 11:07 PM GMT (Updated: 17 Oct 2021 11:07 PM GMT)

தமிழகத்தில் 1,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 30 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 27 ஆயிரத்து 843 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 714 ஆண்கள், 504 பெண்கள் என மொத்தம் 1,218 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 156 பேரும், கோவையில் 132 பேரும், செங்கல்பட்டில் 88 பேரும், ஈரோட்டில் 90 பேரும், தஞ்சாவூரில் 68 பேரும், திருப்பூரில் 73 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறைந்தபட்சமாக தேனி, பெரம்பலூரில் தலா 4 பேரும், தென்காசியில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 வயதுக்குட்பட்ட 82 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 208 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

15 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 84 லட்சத்து 94 ஆயிரத்து 686 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 15 லட்சத்து 68 ஆயிரத்து 363 ஆண்களும், 11 லட்சத்து 18 ஆயிரத்து 691 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேர் உள்பட 26 லட்சத்து 87 ஆயிரத்து 92 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து ஆயிரத்து 108 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 88 ஆயிரத்து 490 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரியில் 9 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 6 பேரும் என 15 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக கோவையில் 4 பேரும், வேலூர், திருச்சி, திருவாரூர், சென்னையில் தலா 2 பேரும், திருப்பூர், திருவண்ணாமலை, ஈரோட்டில் தலா ஒருவரும் என 8 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 30 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 35 ஆயிரத்து 899 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

1,411 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,411 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 151 பேரும், சென்னையில் 170 பேரும், செங்கல்பட்டில் 102 பேரும் அடங்குவர். இதுவரையில் 26 லட்சத்து 36 ஆயிரத்து 379 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 14 ஆயிரத்து 814 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story