இல்லம் தேடி கல்வித்திட்டம் தொடக்க விழா: மரக்காணத்துக்கு மு.க.ஸ்டாலின் நாளை வருகை


இல்லம் தேடி கல்வித்திட்டம் தொடக்க விழா: மரக்காணத்துக்கு மு.க.ஸ்டாலின் நாளை வருகை
x
தினத்தந்தி 25 Oct 2021 10:57 PM GMT (Updated: 25 Oct 2021 10:57 PM GMT)

இல்லம் தேடி கல்வித்திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மரக்காணம் வருகிறார்.

மரக்காணம், 

தமிழக அரசு சார்பில், இல்லம் தேடி கல்வித்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டத்தை விழுப்புரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (புதன்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இதற்காக மரக்காணம் அருகே உள்ள முதலியார்குப்பம் பகுதியில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது. இந்த விழா மாலை 3 மணிக்கு மேல் நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள், குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்ரீநாதா (விழுப்புரம்), சக்தி கணேசன் (கடலூர்) ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். 

அப்போது முதல்-அமைச்சர் வந்து செல்லும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். மேலும் பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Next Story